Tuesday 22 December 2009

திவ்யா என் காதலியே !



செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டிக்காக எழுதப்பட்ட கதை





























சென்னையில் இருந்து புறப்பட்ட அந்த  ரயிலில் வழக்கம்போல பிரசன்னா அலுவலகம் முடிந்து வீடு திரும்பிகொண்டிருந்தான்.அன்றைய தினம் ரயில் பெட்டி மிகவும் வெறிச்சோடி போயிருந்தது.காலையில் இருந்தே அவனுடைய மனம் மிகவும் அமைதியற்று இருந்தது.மெதுவாக ரயில் பெட்டியின் உள்ளே நடக்க தொடங்கிய பிரசன்னா குளிரில் நடுங்கியபடி,மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அமர்ந்திருந்த இளம்பெண் ,அச்சு அசலாய் அவன் காதலி திவ்யாவின் உருவத்தை ஒத்திருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனான்.அவளின் நிலை உணர்ந்து தன்னுடைய குளிராடையை அவளின் மேல் போர்த்திவிட்டான்.எந்த சலனமும் இன்றி வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த அந்த பெண்ணின் முக வாட்டம் அவள் மிகுந்த பசியோடு இருப்பதை நன்கு உணர்த்தியது.தனக்காக வாங்கி வந்திருந்த உணவு பொட்டலத்தை அவளின் முன் பிரித்து வைத்தான்.அளவிடமுடியாத பசியோடிருந்த அந்த பெண் உணவை கண்டதும் அதி விரைவாக அந்த உணவை உண்ண தொடங்கினாள்.


பிரசன்னாவின் நினைவுகள் பின்னோக்கி நகர தொடங்கின.பிரசன்னா மிக்க வசீகரமான அழகுடையவன்.கல்லூரியில் அவன் இயல்பின் பால் கவரப்பட்டு பலரும் அவன் மேல் மையல் கொண்டு காதலை வெளிப்படுத்திய போதும் பிரசன்னா யாருடைய மனதும் புண்படா வண்ணம் அவர்களின் காதலை மறுத்துக்கொண்டிருந்ததான்.அவன் இறுதியாண்டில்நுழைந்தபோதுமுதலாமாண்டு மாணவியாய் வந்த திவ்யாவை கண்டதும் மனஉறுதி எல்லாம் காணாமல் போக கண்டான்,அவனுக்கு திவ்யாவின் மேல் தீராத காதல் உண்டாயிற்று..பிரசன்னா வெளிப்படுத்திய காதலை திவ்யா மறுப்பின்றி ஏற்றுக்கொண்ட போது பிரசன்னாவின் மகிழ்ச்சி பன்மடங்காக பல்கி பெருகியது.

அடுத்த நான்கு ஆண்டுகளில் அவர்களின் காதல் கிழைத்து தழைத்து பெருமரமாக வேரூன்றியது.நன்கு படித்து முடித்து இருவரும் நல்ல வேலையில் சேர்ந்தும் விட்டிருந்தனர்.இருவருடைய குடும்பமும் அவர்களின் காதலை முழுமையாக அங்கீகரித்து திருமணத்திற்கு இசைவும் தெரிவித்திருந்தது.அத்தகையதொரு சூழலில் திடீரெனெ ஒரு சாலை விபத்தில் திவ்யா இறந்து போனபோது பிரசன்னாவிற்கு வாழ்வே சூன்யமாகிபோனது.அவன் முகம் புன்னகையற்று போனது. அவன் நாட்கள் நரகமாக நகர தொடங்கின.அவன் தாயின் வற்றாத கண்ணீர் தான் பிரசன்னாவின் மனதை இளக்கி அவனை இயல்பு வாழ்விற்கு திரும்ப வைத்திருந்தது.அத்தகையதொரு சூழலில் திவ்யாவை போன்றே வயதும் உருவமும் உள்ள ஒரு பெண்ணை மனநிலை சரியில்லாமல், மற்றவர்களால் துன்புறுத்தல்களுக்கு ஆளான நிலையில் கண்டதும் பிரசன்னாவிற்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.சாப்பிட்டு முடித்த பிறகு அந்த பெண் மிகுந்த அசதியால் பிரசன்னாவின் மடியில் தலை வைத்து உறங்க தொடங்கினாள்.பிரசன்னாவிற்கு தன்னுடைய திவ்யாவே தன்னிடம் திரும்பி வந்துவிட்டதை போன்றதொரு அழுத்தமான உணர்வு மேலோங்கியது.சற்று நேரத்தில் எல்லாம் பிரசன்னா இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டது.பிரசன்னா அவளுடைய கைகளை பற்றி அழைக்க அந்த பெண் மறுப்பேதுமின்றி ஒரு குழந்தையாய் அவனை பின் தொடரலானாள்.இனி அந்த பெண்ணிற்கு அழுத்தமான துணையாக பிரசன்னா இருப்பான்.அந்த சிறு ரயில் பயணம் ஒரு மனநிலை சரியில்லாத அபலை பெண்ணின் வாழ்வுக்கு வெளிச்சத்தை உண்டாக்கி இருந்தது.வாழ்வில் எத்தனையோ பேர்களை பிரித்தும்,சேர்த்தும் வைத்துக்கொண்டிருந்த அந்த ரயில் ஒரு நீண்ட சப்தமெழுப்பியபடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்ல ஆரம்பித்தது.


---சே.தரணிகுமார்











Sunday 20 December 2009

காதல்














சின்னசாமியின் குடும்பம் சற்றே பெரியது .அவருக்கு மொத்தம் ஐந்து பெண்கள்.அவர் பொறுப்பில்லாத குடிகாரராக இருந்தபோதும் அவருடைய பெண்கள் பொறுப்பானவர்களாக இருந்ததினால் அவர் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்காமல் இருந்தது.வாணி அவருடைய மூன்றாவது பெண்.வாணி மிகவும் நல்ல குணம் கொண்டவள்.மிகவும் இரக்க சிந்தை கொண்டவள். அந்த குடியிருப்பு பகுதி அனைவருக்கும் வாணி செல்லமான பெண்ணாக இருந்தாள்.குடும்ப சூழலால் வாணியால் எட்டாம் வகுப்பிற்க்கு மேல் படிப்பை தொடர இயலவில்லை.அந்த குடும்பத்தில் மூத்த பெண்ணிற்கு மட்டுமே திருமணம் முடிந்திருந்தது. வாணியும் அவளுக்கு அடுத்திருந்த சகோதரியும் அந்த ஊரில் இருந்த ஒரு காலனி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றியதோடு தனக்கு அடுத்திருந்த இளைய சகோதரிகளையும் படிக்க வைத்துக்கொண்டிருந்தனர்.


மதனை சந்திக்கும்வரை வாணியுடைய வாழ்க்கை தெள்ளிய நீரோடையாகவே சென்று கொண்டிருந்தது.மதன் அந்த ஊரில் ரயில்வே மின்மயமாக்கல் பணியின் நிமித்தமாக தற்காலிகமாக தங்கி இருந்தான்.எதேச்சையாக ஒருநாள் வாணியை கோவிலில் பார்த்த மதன் பார்த்த நொடியே தன்னுடைய மனதை வாணியிடம் பறிகொடுத்துவிட்டான். மதன் இயல்பிலேயே மிக இனிமையாக பழக கூடியவன்.அவனுடைய வசீகரமான தோற்றமும்,இனிமையான புன்னகையும் எவரையும் அவன் மெல் மையல் கொள்ள வைக்கும் காரணிகளாக இருந்தது.தனக்கு மேல் ஒரு திருமணமாகாத சகோதரி இருக்கும் நிலையில் தான் காதல் வயப்படுவது சரிதானா என்று முதலில் தவித்த வாணியால், இறுதியில் மதனுடைய காந்த காதல் பார்வையின் முன்பு ஒன்றுமே செய்ய இயலாமல் அவனுடைய காதலை ஏற்றுக்கொள்ளும் படி ஆகி போனது.

அவர்கள் காதல் மிக மிக பரிசுத்தமானதாக இருந்தது.கண்ணியம் மிக்கதாக இருந்தது.பெரும்பாலும் அவர்கள் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக வரும் சந்தர்ப்பங்களிலேயே தங்கள் மனங்களை பறிமாறிக்கொள்ளலாயினர்.வாணி மதனை தன்னுடைய கணவனாகவே மனதில் வரித்திருந்தாள்.ஒருநாள் மதன் வேலைக்கு சென்றுகொண்டிருந்த சமயத்தில் சிறு குழந்தைகளின் பள்ளிகூட வகுப்பறைக்குள் நாக பாம்பு ஒன்று நுழைந்து விட அங்கிருந்த அனைவரும் செய்வதறியாது திகைத்து நிற்க மிக்க துணிச்சலுடன் வகுப்பறைக்குள் நுழைந்த மதன் அந்த கொடிய பாம்பை கொன்று குழந்தைகளின் அச்சத்தை போக்கினான்.அப்போது அங்கிருந்த ஊர் பெரிசுகள் சிலர் அன்று நாக பன்சமி என்றும் இந்த நாளில் நாக பாம்பை கொள்பவர்கள் மரணமடைவார்கள் என்றும் பேசிக்கொண்டார்கள்.


மறுநாள் ரயில்வே நிலையத்தில் கையில் அலை பேசியில் பேசிக்கொண்டே நான்கைந்து தண்டவாளங்கள் இருக்கும் பகுதியை கடந்த மதன் ஒரு தண்டவாளத்தில் மெதுவாக வரும் ரயிலை கவனித்தவன் மற்றொரு தண்டவாளத்தில் வந்த விரைவு ரயிலை கவனிக்க தவறியதால் அந்த ரயிலில் சிக்கி துண்டு துண்டாக சிதறி போனான்.மதன் வெளி ஊரை சேர்ந்தவன் என்பதால் ஊரில் இருப்பவர்களுக்கு அவனுடைய இறப்பு என்பது வேடிக்கை பார்க்கும் விஷயமாக மட்டுமே ஆகி போனது.செய்தி அறிந்த வாணி வேரறுந்த கொடியாக துவண்டு போனாள்.அவளுக்கு மதனுடைய உடலை பார்க்க கூட இயலாமல் போனது.துடிதுடித்து போன வாணிக்கு இந்த உலகமே இருண்டு போனது.மதன் இல்லாத வாழ்வை அவளால் சிறிது கூட கற்பனை செய்ய முடியவில்லை.

அன்று இரவு முழுமையும் மதனை எண்ணி தவித்த வாணி அவன் இல்லாத உலகில் வாழ விருப்பமின்றி அதிகாலையில் ஊருக்கு ஒதுக்குபுரமாக இருந்த வயல்வெளி கிணற்றில் விழுந்து தன்னுடைய உயிரை மாய்த்து கொண்டாள். அடுத்த இரண்டு நாட்கள் வாணியை காணாது தவித்து தேடிக்கொண்டிருந்த அவளுடைய குடும்பத்திற்கு அவள் இறந்து போய் கிணற்றில் பிணமாக மிதக்கும் செய்தி பேரிடியாக இருந்தது.அவள் இறந்ததின் காரணம் அவளுடைய நெருங்கிய நட்புகளுக்கு அன்றி வேரெவெருக்கும் சிறிதும் தெரியாமலேயே போனது.

அந்த ஊரை சேர்ந்த சுப்ரமணி தொட்ட விஷயதிற்கு எல்லாம் தானும் பயந்து அடுத்தவர்களையும் பயமுறுத்தும் இயல்பு கொண்டவர். வாணி இறந்து ஒரு வாரத்திற்கு பிறகு அவள் இறந்த கிணற்றின் வழியாக இருள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையில் சுப்ரமணி வந்து கொண்டிருந்த போது கூட்டத்தை விட்டு பிரிந்து தன் தாயை தேடி அங்குமிங்கும் அல்லாடிக்கொண்டிருந்த ஒரு ஆட்டு குட்டியின் கழுத்தில் கிடந்த சலங்கைகளின் ஒலி அந்த நிசப்தமான நேரத்தில் அவருக்கு வாணி என்னும் பேயின் கால் சலங்கை ஒலியாக கற்பனையாக பயமுறுத்தியது.இப்படியாக பலரின் கற்பனையின் விளைவாக வாணி என்னும் அன்பான பெண் கொடூரமான பேயாக சித்தரிக்கப்பட்டுவிட்டாள்.அந்த கிணற்றிற்கு வாணி கிணறு என்று பெயரும் வந்து விட்டது.


இந்த உலகில் காதலிப்பது ஒருவனாகவும் கரம் பிடிப்பது வேரொருவனாகவும் சிறிதும் மன உறுத்தலின்றி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புகை படத்திற்க்காக புன்னகையோடு காட்சி கொடுக்கும் பெண்கள் மத்தியில் மனதால் மட்டுமே கணவனாக வரித்து வைத்திருந்த தன்னுடைய அன்பு காதலனின் பிரிவை தாங்க இயலாமல் தன்னுடைய உயிரை துறந்த வாணி என்னை பொறுத்தவரை காதல் தேவதையாக மட்டுமே தெரிகிறாள்.அவள் இறந்து போன கிணற்றின் பக்கம் செல்வதற்கு எனக்கு என்றும் அச்சம் வந்ததே இல்லை.








சே.தரணிகுமார்

Friday 13 November 2009

தியாகம்

  








சூரியன் மலை முகடுகளை முத்தமிடும் ரம்மியமான மாலை பொழுது ஒன்றில் சரவணன் தனது காதலை யாமினியிடம் வெளிப்படுத்தினான். சரவணனும் யாமினியும் சிறு வயதில் ஒன்றாக பயின்றவர்கள். பின்னர் சரவணன் வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டு விட்டாலும் அவன் யாமினியுடனான தனது நட்பு சிதையாமல் கவனமுடன் பார்த்துக்கொண்டான். முதன்முதலாய் யாமினியை பார்த்த நிமிடம் முதல் அவனுள் ஒரு இனம்புரியாத ஈர்ப்பு அவள் மீது ஏற்பட்டிருந்தது. யாமினியின் தந்தை புத்தகப்பிரியர் என்பதால் அதையே காரணமாக கொண்டு , தன வீட்டிற்கு வரும் வார, மாத பத்திரிக்கைகளை எல்லாம் அவருக்கு தருவதை வழக்கமாக வைத்து,அதன்மூலம் யாமினியுடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கி கொண்டான்.


சரவணன் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்த சமயத்தில் தான், தனது காதலை யாமினியிடம் முதன் முதலாய் வெளிப்படுத்தினான். அந்த காதலை யாமினியும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டவுடன் சரவணன் சிறகுகள் முளைத்து வானில் பறப்பதை போன்று அளவில்லாத மகிழ்ச்சி கொண்டான். காதல் உணர்வு அவன் மனமெங்கும் நிறைந்து இருந்ததால் யாமினியுடன் இருக்கும் தருணங்களில் அவனுக்கு இந்த உலகமே வசப்பட்டு விட்டதை போன்று மட்டில்லாத மகிழ்ச்சியில் திளைத்தான். அவர்கள் காதலை அவர்களன்றி வேறொருவரும் அறியா வண்ணம் இருவரும் மிக கவனமுடன் பார்த்துக்கொண்டார்கள்.பலநேரம் கண்களாலேயே அவர்களின் மனங்களை பரிமாறிக்கொண்டார்கள். காதலில் கண்களால் பேச தொடங்கி விட்டால் வார்த்தைகள் செயலற்றதாகி விடுகிறது. ஆழமான உணர்வுகளை கூட கண்கள் மிக எளிதாக பிரியமானவர்களுக்கு எடுத்துச்சொல்லி விடுகிறது.

சரவணன் கல்லூரியில் மூன்றாமாண்டு அடியெடுத்து வைத்த   சமயத்தில் சற்றும் எதிர்பாராவிதமாக யாமினியின் தாய் இறந்து போனபோது, யாமினியின் நிலையை கண்டு சரவணன் மிகவும் பரிதவித்து போனான். அவளின் தாயுடைய மரணம் அவளின் வாழ்வையே திசை மாற்ற காரணமாகி விட்டது. நடந்த நிகழ்வின் பாதிப்பிலிருந்து யாமினி மீளும்முன்பே,அவளுடைய தந்தை மிகவும் உடல்நிலை பாதிப்புள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது யாமினி அனலிடை புழுவாக துடிதுடித்து போனாள். அந்த தருணத்தில் உறவுகளால் சூழப்பட்டிருந்த யாமினியிடம் ஆறுதல் சொல்லி தேற்றவும் சரவணனால் இயலாமல் போனது. மருத்துவர்கள் யாமினியின் தந்தை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக அறிவித்திருந்தார்கள்.

நெடுநாட்களாக யாமினியை தன்னுடைய உதவாக்கரை தம்பிக்கு மணமுடிக்க ஆவல் கொண்டிருந்த,அவளுடையஅக்கா மிருதுளாவின் கணவன், இதையே சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு , தன் தம்பிக்கும் , யாமினிக்குமான திருமணத்திற்கு நிர்பந்தபடுத்த தொடங்கினான். ஒருவேளை இது நடைபெறாவிட்டால் மிருதுளாவை நிரந்தரமாக விலக்கி வைத்து விடுவேன் என்று அவன் விடுத்த மிரட்டலால் யாமினியின் உறவுகள் அரண்டு போயின. இந்த பேச்சுக்கள் யாமினியின் தந்தையின் காதுகளை எட்டியபோது , அவருக்கு தன் உடல் நிலை இருக்கும் நிலையில், மகளின் திருமணம் என்ற கேள்விக்குறிக்கு விடை கிடைத்த சந்தோஷத்தில், தனது செல்ல மகளின் ஆழமான காதலை சற்றும் அறியாதவராதலால் உடனே இதற்க்கு சம்மதித்து உறுதி கூறிவிட்டார். அடுத்த வாரமே திருமணம் நடத்துவது என்று முடிவாகி போனது.


 சரவணனை தனிமையில் சந்தித்து நடந்த  நிகழ்வுகளை கூறி கண்ணீர் சிந்திய யாமினியை கண்டு சரவணன் செய்வதறியாமல் கலங்கி நின்றான். அவன் மனமெங்கும் யாமினியே நிறைந்திருந்ததால் , அவள் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவது என்ற உறுதியோடு இருந்தான். யாமினி சரவணனை  காட்டிலும் மிக தெளிவானவள். எல்லா சூழலிலும் யாமினி எடுக்கும் முடிவுகளே இதுவரை சரியாக அமைந்திருந்தது. மறுநாள் அதே இடத்தில் தன்னை சந்திக்கும்படி சொல்லிவிட்டு யாமினி சென்று விட்டாள்.
 
அன்றைய இரவு சரவணனுக்கு மிகவும் நீண்டதாக  தோன்றி  அவனை மிகவும் துன்புறுத்தியது. சுவர்க்கோழிகளின் சாதாரணமான  சத்தம் கூட அவனுக்கு   மிக பூதாகரமாக கேட்டது. அவனுள் கவிதை பொங்க வைக்கும் நிலவின் ஒளி அன்றைய தினம் அவனுக்கு வெம்மையாய் சுட்டது. யாமினியுடன் நட்பும் காதலுமாய் நகர்ந்த நாட்களின் நினைவுகள் அவன் மனத்திரையில் காட்சிகளாய் விரிந்து கொண்டே இருந்தது. காலையில் அம்மாவின் குரலை கேட்ட பிறகே தான் இரவு முழுதும் உறங்காமலேயே இருந்து விட்டதை சரவணன் உணர்ந்தான்.


 
யாமினி வருவதற்கு நெடுநேரம் முன்பே அவள் சொன்ன இடத்தில் அவளுக்காக  காத்திருந்த  சரவணனின் மனதில் குழப்பங்களே அதிகம் அணிவகுத்திருந்தன. ஆனால் யாமினியின் சொல்லுக்கு  முழுமையாக  கட்டுப்படுவது என்பதில் மட்டும் அவன்  தெளிவாக இருந்தான். யாமினியற்ற வாழ்க்கை  என்பது அவனுக்கு இருள் சூழ்ந்ததாகவே  மனதிற்கு பயம் தந்தது. எப்போதும்  புன்னகையுடன் சரவணனை  எதிர்கொள்ளும்  யாமினியின்  முகம் அன்று மிகவும் இறுக்கமாக இருந்தது. இரவு முழுமையும் அவளும் உறங்காமலேயே இருந்திருப்பாள் என்பதை அவள் விழிகள் சொல்லின. நெடுநேரம் வரை  பேச்சற்றவர்களாக  ஒருவரை ஒருவர் இயலாமையுடன்   பார்த்துக்கொண்டிருந்தனர்.   உணர்வுகளின் பெருக்கால் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது .
 
யாமினி தான் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும் என்று நம்புகிறாயா? என்று சரவணனை கேட்ட போது அவன் அதை மவுனமாய்   ஆமோதித்தான் .யாமினி தற்போதைய சூழலில் அவர்கள் பிரிவது ஒன்றே அனைவருக்கும் நன்மை பயக்கும்  என்பதால்  திருமணத்திற்கு இசைவு தெரிவிக்க முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்தாள்.  ஒருவேளை இதை தவிர்த்து சரவணனை கரம் பிடித்தால், அவர்களால் அந்த ஊரில் உறவுகளை எதிர்த்து வாழ இயலாமல் போகும், அந்த நிலையில் சரவணனது  பொறியாளர்  ஆகும்   கனவு நிச்சயம் தகர்ந்து போகும்.எங்கோ ஒரு ஊரில் எதோ ஒரு வேலை செய்து கொண்டு வாழ்வை நிலை நிறுத்தி கொள்ள போரடவேண்டிய கட்டாயம் ஏற்படும்.  இவர்கள் இப்படி முடிவு எடுப்பார்களேயானால் ,மருத்துவமனையில் இருக்கும் யாமினின் தந்தைக்கு நிச்சயம் ஏதேனும் அசம்பாவிதம் நேரிடும். அவளுடைய அக்கா மிருதுளா, கணவனால் கை விடப்பட்டு வீட்டிற்கு வந்து விடும் சூழல் வரும் .பல்வேறு தரப்பிலும் குடும்பத்தினரது வெறுப்பையும், சாபத்தையும் பெற்று தொடங்கும், புது வாழ்வு எந்த வகையிலும் மன நிறைவானதாக இருக்காது என்பதை சரவணனுக்கு யாமினி முழுமையாய் உணர்த்தினாள். இதை எல்லாவற்றையும் விட சரவணன் வாழ்வில் நல்ல நிலைக்கு உயரவேண்டும் என்ற எண்ணமே யாமினிக்கு மேலோங்கி இருந்ததால் தன்னுடைய ஆசைகளை பலி கொடுக்கும் முடிவுக்கு அவள் வந்து விட்டிருந்தாள். 
 
அவளின் மன உணர்வுகளை  முழுமையாய் உணர்ந்த சரவணனுக்கு அவளின் முடிவை எதிர்த்து பேச நா எழவில்லை.அவள் நன்றாக வாழ வேண்டும் என்ற ஆதங்கமே அவனின் மனதை ஆட்கொண்டிருந்தது.  பெண்கள் பல்வேறு சூழ்நிலைகளில் தங்களின் மன உணர்வுகளுக்கு சமாதி கட்டிவிட்டு , குடும்பதினர்களுக்காக சிலுவை சுமக்க தயாராகி விடுகிறார்கள் . இந்த பரந்த உலகை பெண்களின் அர்பணிப்பும் , தியாகமுமே தாங்கி  நிற்கிறது.  அவர்கள் எளிதாக மற்றவர்களுக்காக விட்டு கொடுக்க முன்வருகிறார்கள் . ஆயினும் பெண்மையின் மேன்மையை சமுதாயம் இன்றளவும் அரைகுறையாகவே புரிந்து கொண்டிருக்கிறது.



விரைவாக யாமினியின் திருமணம் நடந்து முடிந்தது. அவள் மனமெங்கும் உணர்வுகளின்   சூறாவளி  வீசிக்கொண்டிருந்ததால் அவளின் முகம் புன்னகையற்று போய் விட்டது. தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு படிக்காத மாப்பிள்ளையை கல்யாணம் செய்து , அக்காவின் வாழ்வையும்  காப்பாற்றி  விட்டதாக உறவுகள் அவளை கொண்டாடின.சரவணனுக்கும், தந்தைக்கும், அக்காவிற்கும் ஒருசேர  தன்னுடைய இந்த முடிவால் நன்மை ஏற்பட்டதால் யாமினி சிறிதளவு ஆறுதல் கொண்டாள்.

நாட்கள் உருண்டோடின.பல வருடங்களுக்கு பிறகு சரவணன் இன்று ஒரு பெரிய நிறுவனத்தில் உயரிய பொறுப்பில் இருக்கிறான். திருமணமே வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்த சரவணனை யாமினியின் சொல் தான் இறுதியில் பணிய வைத்தது.  இன்று அவனுக்கு அன்பான மனைவியும் அழகான குழந்தைகளுமாய் நல்ல சூழலில் வாழ்க்கை சீராக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் யாமினிக்கு தான் வாழ்க்கை அத்துணை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அவளின் கணவனின் சரியற்ற போக்கால் அவள் மிகுந்த சிரமங்களிநூடே தனது வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிறாள் . சரவணனுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைந்திருப்பதே அவளுக்கு ஒரே மன ஆறுதல் தரும் விஷயமாக இருக்கிறது. தனக்கு நல்ல வாழ்வு அமைய காரனாக இருந்த யாமினியின் தற்போதைய நிலை தான் பல நேரங்கள் சரவணனது சந்தோஷங்களை ஊனமாக்கி விடுகிறது.
.

வாழ்க்கை எத்துணை புதிரானது? அது பல்வேறு கால கட்டங்களில் மனதிற்கு பிடித்தவர்களை சேர்ப்பதும், பிரிப்பதுமாய் தன்னுடைய கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆடிக்கொண்டே இருக்கிறது. வெகு சிலருக்கு மட்டுமே அது அவர்களின் வசப்பட்டதாய் அமைந்து விடுகிறது.  எண்ணிலடங்காத பேர்களுக்கு அது எட்டாக்கனியாகவே இருந்து வாழ்நாள் முழுமையும் அவர்களை வருத்தம் கொள்ள வைத்து விடுகிறது.








--சே.தரணிகுமார் 

Monday 9 November 2009

மனிதாபிமானம்









வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து  சென்னைக்கு  வேலைக்கு சென்று வருபவர்களுக்கு  ஏலகிரி விரைவு ரயில் என்பது வாழ்வோடு பின்னி பிணைந்த ஒன்று. இரண்டு மணி முதல் எட்டு மணி வரை தினமும் பிரயாணம் செய்யும் அவர்கள் ஏலச்சீட்டு, மாதசீட்டு நடத்துவது முதல் இசைக்குழு அமைத்து பாடுவது என்று பல குழுக்கள் அமைத்து அந்த ரயில் பயண நேரத்தை பல்வேறு வகையாக பயன்படுத்தி கொண்டனர்.காலை ஐந்து மணிக்கு புறப்படும் அந்த ரயில் ஒன்பது மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்த பதினைந்து நிமிடங்களுக்குள் மொத்த கூட்டமும் அலுவலக நேரம் காரணமாக அதி விரைவாக கலைந்து விடும். எனக்கும் இரண்டு வருடம் அந்த ரயில் பயண அனுபவம் கிட்டியது.


ஒருமுறை அந்த ரயிலின் காலை நேர பயணத்தில் எங்களோடு பார்வையற்ற நபர் ஒருவர் பயணம் செய்தார். அவர் மிக இனிமையாக பேசியதால் அவரை சுற்றிலும் இருப்பவர்கள் அவருடன் பேசுவதற்கு மிக்க  ஆவல் கொண்டனர். அவர் தன் மகளின் திருமண விஷயமாக திருவேற்காடு வரை செல்வதற்காக அந்த ரயிலில் வந்து கொண்டிருந்தார். அவர் சென்னைக்கு வருவது இதுவே முதல் முறை என்பதால் , உடனிருப்பவர்களை தனக்கு திருவேற்காடு செல்லும் பேருந்திற்கு வழி காட்டுமாறு பலமுறை சொல்லிக்கொண்டே வந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தவுடன் வழக்கம் போல மொத்த கூட்டமும் குறுகிய நேரத்தில் காணாமல் போனது. தட்டு தடுமாறி ரயிலை விட்டு இறங்கிய அந்த பார்வையற்ற நபர் செய்வதறியாது திகைத்து நின்று கொண்டிருந்தார்.

அதுவரை அவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு வந்த   பலருக்கும்,  அந்த விழியிழந்த  நபர் வழி காட்ட வேண்டி விடுத்த  தாழ்மையான கோரிக்கை, உதவும் மனம் துளி   கூட இல்லாததால் எல்லோருக்கும் மிக
 எளிதாக மறந்து போயிருந்தது.சினிமாவிலும் , தொலைக்காட்சியிலும் வரும் கதாபாத்திரங்களின் துயரம் கண்டு கண்ணீர் சிந்தி மனதார இரக்கப்படும் மக்கள்,  நிஜ வாழ்வில்  துன்பப்படுபவர்களுக்காக  உண்மையிலேயே இரக்கம் கொள்ள  துணிவதே  இல்லை. கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் துயரம் எத்துணை கற்பனையானதோ அதுபோல  இந்த மக்களின் இரக்க சிந்தனையும் கற்பனையான ஒன்றாகவே
 இருக்கிறது. இந்த நவீன  உலகில் மனிதாபிமானம் என்பது  அரிதான பொருளாகிவிட்டது.

நான் அவருடன் பேசவில்லை என்றாலும் நடந்த நிகழ்வுகளை பார்த்துக்கொண்டிருந்ததால்  , எனக்கு அவருடைய தேவை புரிந்தது. நான் அவருடைய கரம் பற்றி மெதுவாக ரயில்நிலையம் வெளியே அழைத்து வந்து , சுரங்கபாதையிநூடே  சாலையை கடந்து  எதிர்புறம் இருந்த பேருந்து நிறுத்தத்தில் திருவேற்காடு செல்லும் பேருந்து வரும் வரை காத்திருக்க ஆரம்பித்தேன். தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்கள் தாமதமாக செல்லும்போது உயரதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. என்னுடைய அலுவலக நேரம் ஒன்பது முப்பதிற்கு  தொடங்கிவிடும். என்னுடைய உயரதிகாரி மிகவும் சிடுசிடுப்பானவர். எனக்கு இன்று நிச்சயம் திட்டு விழும் என்பதை உணர்ந்திருந்தும் , அந்த பார்வையற்ற நபரை பரிதவிக்க விட்டு சென்று விட மனம் ஒப்பவே இல்லை.

திருவேற்காடு  செல்லும் பேருந்து வந்ததும் , அதில் அவரை ஏற்றிவிட்டு நடத்துனரிடம் அவரின் நிலையை விளக்கி , அவரை பத்திரமாக திருவேற்காடு நிறுத்தத்தில் இறக்கி விடும்படி கேட்டுக்கொண்டு, பிறகு நான் செல்லவேண்டிய இடத்திற்கு பேருந்து பிடித்து அலுவலகம் அடையும்போது மணி பத்து முப்பதை தொட்டிருந்தது. , ஒரு விழியற்ற நபருக்கு வழி காட்டி அவருடைய கலக்கத்தை போக்கிய மனநிறைவு என்னுள் நிறைந்திருந்ததால் வழக்கம் போல எனது உயரதிகாரி பாடிய வசை சொற்கள் அன்று மட்டும் எனக்கு தவறான அர்த்தம் கொண்டதாக  தோன்றவே இல்லை.







--சே.தரணிகுமார்

Sunday 8 November 2009

பிரிவு










பிரபுவை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட கார் வாசலில் தயாராக நின்று கொண்டிருந்தது. அங்கு நிலவிய ஒரு கணத்த மௌனம் எல்லோருடைய பேச்சையும் விழுங்கி விட்டிருந்தது. பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் அர்த்தமுள்ளதாய் அப்போது தோன்றியது. பிரபுவுக்கு துபாயில் வேலை . வருடத்திற்கு ஒரு மாதம் விடுப்பில் ஊருக்கு வருவான். அவனுக்கு அன்பான மனைவியும் , அழகான இரண்டு குழந்தைகளும் இருந்தனர். பிரபுவுக்கும் அவன் மனைவி அமிர்தாவுக்கும் சந்தோசம் என்பது அந்த ஒரு மாத கால வாழ்க்கைதான். பதினோரு மாதங்கள் அந்த ஒரு மாதத்தின் நினைவுகளிலேயே கழிந்துவிடும். பிரபுவுக்கு அலுவலக ரீதியான அழுத்தம் அதிகம் . அமிர்தாவுக்கு குழந்தைகளையும் , வீட்டையும் பராமரிக்கவே நேரம் சரியாக இருக்கும். இடைப்பட்ட காலங்களில் அலைபேசி மூலமாகவே அவர்களது அந்தரங்கங்கள் பரிமாறிக்கொள்ளப்படும். செல்லமான சிணுங்கல்களும், சண்டைகளும், சமாதானங்களும் அலைபேசி மூலமாகவே அன்றாடம் அரங்கேறும்.


முப்பது நாட்கள் விடுப்பு பிரபுவுக்கு மிகவும் போதாமல் இருந்தது. ஊருக்கு வரும் முப்பது நாட்களில் ,முதல் பத்து நாட்கள் உறவினர்களின் நல விசாரிப்புகளிலேயே வீண் விரயம் ஆனது. இடையில் இருக்கும் பத்து நாட்களில் மட்டுமே அவனுக்கென்று நேரம் செலவழிக்க நேரம் ஏதுவாகியது. அந்த பத்து நாட்களில் ஏதேனும் உறவுகளுக்கோ அல்லது நண்பர்களுக்கோ திருமணம், விசேஷம் என்று வந்துவிட்டால் விடுப்பில் வந்தது மன நிறைவில்லாமல் போனது. கடைசி பத்து நாட்கள் வேலைக்கு திரும்பவேண்டுமே என்ற எண்ணமே மேலோங்கி இருப்பதால் அந்த நாட்கள் அத்துணை ரசிக்கும்படியாக இருந்ததில்லை.


வெளிநாட்டிற்கு குடும்பத்தை பிரிந்து வேலைக்கு செல்பவர்களின் மனம், ஊருக்கு புறப்படும் சமயங்களில் , தாயை பிரிந்து முதன்முதலாக பள்ளிக்கு செல்ல அடம் பிடிக்கும் குழந்தையின் மனதை போல கலக்கமாய் இருக்கின்றது. குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தங்களால் , தன் சுய உணர்வுகளை கூட வெளிக்காட்டமுடியாமல் ,மாய திரைகள் மூலம் அவர்கள் தங்களது உணர்வுகளுக்கு திரையிட்டு கொள்ளவேண்டியதாக இருக்கிறது. குடும்பத்தின் மீது பற்று கொண்ட எவருக்கும் வீட்டை விட்டு பிரிந்து செல்வது அத்துணை சுலபமான ஒன்றாக இருந்ததில்லை. கண்களின் கண்ணீரை அவர்கள் மிகுந்த சிரமங்களூடே மறைத்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. மனைவியின் கடைசி நேர தழுவல்களில் மறைந்திருக்கும் வலி மிகுந்த மன உணர்வை வார்த்தைகளில் அத்துணை சுலபமாய் வர்ணித்துவிட முடியாது. தந்தையை பிரியும் குழந்தைகளின் ஏக்கங்கள் அவர்களின் முகங்களில் அப்பட்டமாய் தோன்றுவதை பார்க்கும் போது , எல்லாவற்றையும் உதறி விட்டு அவர்களுடனேயே இருந்து விட முடியாதா? என மனம் பேராவல் கொள்கிறது. ஊரிலிருந்து திரும்பி வரும்போது விமானத்தில் எடை குறைவாக அனுமதிப்பதின் காரணம் அவர்களின் மனம் மிகவும் கணமாக இருப்பதாலா ? என்று கூட எண்ண தோன்றுகிறது.


ஊருக்கு கிளம்புகிற முந்தைய நாளில் பிரபு வீட்டின் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்போது உயரத்தில் பறந்து கொண்டிருந்த பருந்தை கண்ட தாய் கோழி ஒன்று விடுத்த அபய குரலை கேட்ட கோழி குஞ்சுகள் தன் தாயின் இறகுகளின் உள்ளே வசதியாய் மறைந்து கொண்டன. பின்னர் அருகில் வந்த பருந்தை மூர்க்கமாக கொத்துவதர்க்காக தாய் கோழி எத்தனித்தது. வீட்டினுள் இருந்து ஆட்கள் ஓடிவரவும் பருந்து அங்கிருந்து பறந்து விட்டது. பிரபுவின் வீட்டில் எப்போதும் நிறைய கோழிகள் இருக்கும். மின்சாரத்தால் குஞ்சுபொரிக்கப்பட்ட கோழிகளையும் அவர்கள் வளர்த்து இருக்கிறார்கள். ஒருமுறை வாங்கப்படும் குஞ்சுகளில் கால் பங்கு கூட வளர்ந்து பெரிய கோழிகள் ஆவது கடினம். அவைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும் , தங்களை கொத்த வரும் பறவை போன்ற ஆபத்துகளில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும் பக்குவம் அந்த குஞ்சுகளுக்கு தெரியாததும் இதற்க்கு காரணமாய் இருந்தது. தாய் கோழியுடன் இருக்கும் குஞ்சுகள் எப்போதும் மிகுந்த பாதுகாப்புடன் இருந்தன. இரை தேடி தருவது முதல்,ஆபத்து நேரங்களில் எல்லாவிதமாகவும் முயன்று தன் குஞ்சுகளை தாய் கோழி காப்பாற்றுவதால் , அந்த குஞ்சுகள் கூடுமானவரை எல்லாமும் வளர்ந்து பெரிய கோழிகள் ஆயின.


பருந்து சென்ற பிறகும் நெடுநேரம் வரை இதை பற்றியே சிந்தித்து கொண்டிருந்த பிரபுவை அவனுடைய குழந்தைகளின் அன்பான அழைப்பு, சிந்தனையில் இருந்து மீள வைத்து. இந்த அழகான குழந்தைகள் மின்சார கோழி குஞ்சுகளை போல இல்லாமல் , தாய் கோழியுடன் வளரும் குஞ்சுகளை போல பாதுகாப்பாகவும், அன்புடனும் சமுதாயத்தை எதிர்கொள்ளும் மனோ வலிமையுடன், தாய் தந்தை இருவரின் அரவணைப்பில் வளர வேண்டும் என்று பிரபுவின் மனம் உறுதியாய் எண்ண தொடங்கியது.


பெரியவர்களிடம் ஆசி பெற்று ,மனைவியின் கரம் பற்றி ஆறுதல் சொல்லி ,குழந்தைகளை வாரி மார்போடு அணைத்து முத்தமிடும் பிரபுவை , இனி பதினோரு மதங்கள் கழித்தே காண முடியுமென்று ஒட்டுமொத்த உறவுகளும் எண்ணிக்கொண்டு அவனுக்கு மௌனமாய் விடை கொடுத்தது . ஆனால் துபாய் சென்று, உடனடியாக விசாவை ரத்து செய்து விட்டு ஊருக்கு திரும்பி வர இருக்கும் பிரபுவுக்கு இந்த எண்ணம் வர காரணமாய் இருந்த அவர்கள் வீட்டு தாய் கோழி , இது பற்றி ஏதும் அறியாது , தோட்டத்தின் மூலையில் தன் குஞ்சுகளுக்கு இரையை சீய்த்து கொடுத்து கொண்டிருந்தது.









--சே.தரணிகுமார்

வீண்பழி










ஆந்திரத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு பெரிய குடும்பம் எங்கள் ஊரில் டென்ட் அமைத்து தங்கி  இருந்தது. அவர்கள் ராஜ வைத்தியம் என்னும் வைத்திய முறையை கொண்டு பச்சிலை வைத்தியம் செய்து வந்தார்கள். அவர்கள் பணம் என்பது  குறிக்கோளாக   இல்லாமல் ,அவரவர் வசதிக்கேற்ப  வைத்தியத்திர்க்கான   பணத்தை பெற்று கொண்டார்கள். மிகவும்  
 இயலாதவர்களுக்கு கூடுமானவரை இலவசமாகவே  வைத்தியம் பார்த்தனர். அவர்கள் ஊருக்கு வந்த  இரண்டு மாதங்களில்   சுற்றுவட்ட  பகுதிகளில்  எண்ணற்ற  நோயாளிகள் அவர்களால் பலனடைந்து இருந்தனர்.


 ஊருக்கு வெளியில் இருந்த ஆலமரத்தடியினில் அவர்கள் தங்கி இருந்த இடத்தை மிகவும் சுத்தமாக பராமரித்து, சம்பாதிக்கும் பணத்தை கொண்டு சுகமாக வாழ்ந்து வந்தார்கள். அந்த சமயத்தில் அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கருகில்  இருந்த பம்பு செட் வீட்டில் இருந்த வயதான பெண்மணியை யாரோ நகைகளுக்காக கொலை செய்து விட்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணையை மேற்கொள்ளலாயினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. பிணம் இருந்த இடத்தை முகர்ந்த மோப்ப நாய் நேராக ராஜவைத்தியம் செய்பவர்களின் டென்ட் அருகே வந்து அமர்ந்து கொண்டது. பின்னர் அது சாலையின் பக்கம் சென்று படுத்து  கொண்டது.


எதையுமே மேலோட்டமாகவே சிந்தித்து, ஒருதலைப்பட்சமாகவே செயல்பட்டு பழகி போன காவல்துறையினர்,உடனே அங்கிருந்த ராஜவைத்தியம் செய்யும் ஆண்கள் ஆறுபேரை விசாரணைக்காக கைது செய்து அழைத்து சென்று விட்டனர். மீதமிருந்த பெண்களும்  குழந்தைகளும் மிகவும் கலக்கமுற்று கதறி அழ தொடங்கினர். இறந்து போனவரின் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு இவர்களின் வைத்தியத்தால்  பலன்பெற்ற  ஊர்மக்களும் ,   நடந்த சம்பவத்தை நேரில் கண்டது போல  அந்த அப்பாவிகளை பழித்து கூறலாயினர். நியாயமற்ற முறையில் வீண்பழி சுமத்தும் ஊரார்களின்  முன்பு அந்த பெண்களும் குழந்தைகளும் நடு நடுங்கியபடி பரிதவித்து நின்று கொண்டிருந்தனர்.


காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட ராஜவைத்தியம் செய்யும் ஆண்கள் காவல்துறையினரால் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்பட்டனர். கொலை செய்ததை ஒப்புக்கொள்ளும்படி கடுமையாக சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டனர். அன்று மறுநாள் அந்த ஊரை சேர்ந்த வேலப்பன் எதேச்சையாக பக்கத்து டவுன் கடைவீதி வழியாக சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு பரிச்சியமான அடகு கடைகாரர் அவரை அழைத்து , அங்கு நின்றுகொண்டிருந்த இறந்து போன பெண்மணியின்  பேரனான   தியாகுவை காட்டி ,''இவர் உங்கள் ஊர்காரர் என்று சொல்கிறார் , நகை விற்பதற்காக வந்திருக்கிறார் , இவரை  உங்களுக்கு  தெரியுமா? ''  என்று அவர் கேட்டவுடன் கலவரமாகிபோன தியாகு உடனே அவர்கையில் இருந்த நகையை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சட்டென்று நகர்ந்து விட்டான்.


வேலப்பனுக்கு உண்மை புரிந்து போனது .பழக்கவழக்கம் சரியில்லாத தியாகு தான், தனது பாட்டியை நகைக்காக கொன்று இருக்கலாம் என்று அனுமாநித்தவராய் நேரே தன்னுடைய ஊர் காவல் நிலையம் சென்று நடந்தவற்றை கூறியவுடன்,அப்பாவிகளை அழைத்து வந்து குற்றவாளிகளாய் சித்தரித்து வழக்கை முடித்து கொள்ளும் காவல்துறை விழித்து கொண்டு தியாகுவை கைது செய்தது. பத்து பவுன் நகைக்காகவே தான் பாட்டியை கொலை செய்ததாக தியாகு உண்மையை ஒப்புக்கொண்டான். கொலை செய்த பின்னர் சிறிது நேரம் ராஜவைத்தியம் செய்பவர்களின் டென்ட் அருகே தான் அமர்ந்துவிட்டு பிறகு சாலைக்கு வந்து பேருந்தில் ஏறி டவுனுக்கு சென்றதாக தியாகு சொன்னவுடன் தான் காவல்துறைக்கும் ஊர்மக்களுக்கும் மோப்ப நாய் டென்ட் அருகே சென்று அமர்ந்ததின்  காரணம் புரிந்தது.


காவல்துறையினரால் விடுவிக்கப்பட்ட ராஜவைத்தியம் செய்யும் ஆண்கள் திரும்பி வந்ததும் , பரிதவித்து போயிருந்த  அவர்கள் குடும்பத்து பெண்கள் அவர்களை கண்ணீருடன்   கட்டி தழுவி   கொண்டனர் . அன்றைய இரவே அவர்கள் அந்த இடத்தை காலி செய்து  விட்டு எங்கோ போய் விட்டனர்.மறுநாள் வெறிச்சோடி போயிருந்த அந்த இடத்தை கண்ட ஊர்மக்கள்  '' பாவம்  இப்படி வீண்பழியால்  துன்பப்பட்டு விட்டார்களே ''  என்று யாரோ, யாருக்கோ  துன்பம் தந்ததை  போல,  ஒன்றும் அறியாத அப்பாவிகளை போல   வழக்கம் போல உச்சு  கொட்டினார்கள்.








 ----சே.தரணிகுமார்

Friday 6 November 2009

அரவணைப்பு











பிரபுவை  அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட கார் வாசலில் தயாராக நின்று கொண்டிருந்தது. அங்கு நிலவிய  ஒரு கணத்த மௌனம் எல்லோருடைய பேச்சையும் விழுங்கி விட்டிருந்தது. பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும்   மிகவும்  அர்த்தமுள்ளதாய்  அப்போது  தோன்றியது.  பிரபுவுக்கு  துபாயில் வேலை . வருடத்திற்கு ஒரு மாதம் விடுப்பில் ஊருக்கு வருவான். அவனுக்கு அன்பான மனைவியும் , அழகான இரண்டு குழந்தைகளும்  இருந்தனர். பிரபுவுக்கும் அவன் மனைவி அமிர்தாவுக்கும் சந்தோசம் என்பது அந்த ஒரு மாத கால வாழ்க்கைதான். பதினோரு மாதங்கள் அந்த ஒரு மாதத்தின் நினைவுகளிலேயே கழிந்துவிடும். பிரபுவுக்கு அலுவலக ரீதியான அழுத்தம் அதிகம் . அமிர்தாவுக்கு குழந்தைகளையும்  , வீட்டையும் பராமரிக்கவே நேரம் சரியாக இருக்கும். இடைப்பட்ட காலங்களில் அலைபேசி மூலமாகவே அவர்களது அந்தரங்கங்கள் பரிமாறிக்கொள்ளப்படும். செல்லமான சிணுங்கல்களும், சண்டைகளும், சமாதானங்களும் அலைபேசி மூலமாகவே அன்றாடம் அரங்கேறும்.

முப்பது நாட்கள் விடுப்பு பிரபுவுக்கு மிகவும் போதாமல் இருந்தது. ஊருக்கு வரும் முப்பது நாட்களில் ,முதல் பத்து நாட்கள் உறவினர்களின் நல விசாரிப்புகளிலேயே வீண் விரயம் ஆனது. இடையில் இருக்கும் பத்து நாட்களில்  மட்டுமே அவனுக்கென்று நேரம் செலவழிக்க  நேரம்   ஏதுவாகியது. அந்த பத்து நாட்களில் ஏதேனும் உறவுகளுக்கோ அல்லது நண்பர்களுக்கோ திருமணம், விசேஷம் என்று வந்துவிட்டால் விடுப்பில் வந்தது மன நிறைவில்லாமல் போனது. கடைசி பத்து நாட்கள் வேலைக்கு திரும்பவேண்டுமே என்ற எண்ணமே மேலோங்கி இருப்பதால் அந்த நாட்கள் அத்துணை ரசிக்கும்படியாக இருந்ததில்லை.

வெளிநாட்டிற்கு  குடும்பத்தை பிரிந்து வேலைக்கு செல்பவர்களின் மனம், ஊருக்கு புறப்படும் சமயங்களில்  , தாயை பிரிந்து முதன்முதலாக பள்ளிக்கு செல்ல அடம் பிடிக்கும்  குழந்தையின்  மனதை போல  கலக்கமாய்  இருக்கின்றது.  குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தங்களால் , தன் சுய உணர்வுகளை கூட வெளிக்காட்டமுடியாமல் ,மாய திரைகள் மூலம் அவர்கள் தங்களது உணர்வுகளுக்கு திரையிட்டு கொள்ளவேண்டியதாக இருக்கிறது. குடும்பத்தின் மீது பற்று கொண்ட எவருக்கும் வீட்டை விட்டு பிரிந்து செல்வது அத்துணை சுலபமான ஒன்றாக இருந்ததில்லை. கண்களின் கண்ணீரை அவர்கள் மிகுந்த சிரமங்களூடே மறைத்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. மனைவியின் கடைசி நேர தழுவல்களில் மறைந்திருக்கும் வலி மிகுந்த மன உணர்வை வார்த்தைகளில் அத்துணை சுலபமாய் வர்ணித்துவிட முடியாது. தந்தையை பிரியும் குழந்தைகளின் ஏக்கங்கள் அவர்களின் முகங்களில் அப்பட்டமாய் தோன்றுவதை பார்க்கும் போது , எல்லாவற்றையும் உதறி விட்டு அவர்களுடனேயே இருந்து விட முடியாதா? என மனம் பேராவல் கொள்கிறது. ஊரிலிருந்து திரும்பி வரும்போது விமானத்தில் எடை குறைவாக அனுமதிப்பதின் காரணம் அவர்களின் மனம் மிகவும் கணமாக  இருப்பதாலா ? என்று கூட எண்ண தோன்றுகிறது.

ஊருக்கு கிளம்புகிற  முந்தைய நாளில் பிரபு வீட்டின் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்போது உயரத்தில் பறந்து கொண்டிருந்த பருந்தை கண்ட தாய் கோழி ஒன்று விடுத்த அபய குரலை கேட்ட   கோழி குஞ்சுகள் தன் தாயின் இறகுகளின்  உள்ளே  வசதியாய் மறைந்து கொண்டன. பின்னர் அருகில் வந்த பருந்தை மூர்க்கமாக கொத்துவதர்க்காக   தாய் கோழி எத்தனித்தது. வீட்டினுள் இருந்து ஆட்கள் ஓடிவரவும் பருந்து அங்கிருந்து பறந்து விட்டது. பிரபுவின் வீட்டில் எப்போதும் நிறைய கோழிகள் இருக்கும். மின்சாரத்தால் குஞ்சுபொரிக்கப்பட்ட   கோழிகளையும் அவர்கள் வளர்த்து இருக்கிறார்கள்.  ஒருமுறை  வாங்கப்படும் குஞ்சுகளில் கால் பங்கு கூட வளர்ந்து பெரிய கோழிகள் ஆவது கடினம். அவைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும் , தங்களை கொத்த வரும் பறவை போன்ற ஆபத்துகளில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும்  பக்குவம் அந்த குஞ்சுகளுக்கு தெரியாததும் இதற்க்கு  காரணமாய் இருந்தது. தாய் கோழியுடன் இருக்கும் குஞ்சுகள் எப்போதும் மிகுந்த பாதுகாப்புடன் இருந்தன. இரை தேடி தருவது முதல்,ஆபத்து நேரங்களில் எல்லாவிதமாகவும் முயன்று தன் குஞ்சுகளை தாய் கோழி   காப்பாற்றுவதால் , அந்த குஞ்சுகள் கூடுமானவரை எல்லாமும் வளர்ந்து பெரிய கோழிகள் ஆயின. 

பருந்து சென்ற பிறகும்  நெடுநேரம் வரை இதை பற்றியே சிந்தித்து கொண்டிருந்த பிரபுவை அவனுடைய  குழந்தைகளின் அன்பான அழைப்பு,  சிந்தனையில் இருந்து மீள வைத்து. இந்த அழகான குழந்தைகள் மின்சார  கோழி குஞ்சுகளை போல இல்லாமல் , தாய் கோழியுடன் வளரும் குஞ்சுகளை போல பாதுகாப்பாகவும், அன்புடனும் சமுதாயத்தை எதிர்கொள்ளும் மனோ வலிமையுடன்,  தாய் தந்தை இருவரின் அரவணைப்பில் வளர வேண்டும் என்று பிரபுவின் மனம் உறுதியாய் எண்ண தொடங்கியது.

பெரியவர்களிடம் ஆசி பெற்று ,மனைவியின் கரம் பற்றி ஆறுதல் சொல்லி ,குழந்தைகளை வாரி மார்போடு அணைத்து முத்தமிடும் பிரபுவை , இனி பதினோரு மதங்கள் கழித்தே காண முடியுமென்று ஒட்டுமொத்த உறவுகளும் எண்ணிக்கொண்டு அவனுக்கு மௌனமாய் விடை கொடுத்தது .  ஆனால் துபாய் சென்று,  உடனடியாக விசாவை ரத்து செய்து விட்டு ஊருக்கு திரும்பி வர இருக்கும் பிரபுவுக்கு இந்த எண்ணம் வர காரணமாய் இருந்த அவர்கள் வீட்டு தாய் கோழி , இது பற்றி ஏதும்  அறியாது , தோட்டத்தின் மூலையில் தன் குஞ்சுகளுக்கு இரையை  சீய்த்து கொடுத்து கொண்டிருந்தது. 










--சே.தரணிகுமார்  

Tuesday 3 November 2009

கற்பு



 சுகுணா சுமாரான அழகு தான் என்றாலும் பார்க்க திருத்தமாக இருப்பாள். அவளின் அப்பாவும்  அம்மாவும்  விவசாய கூலிகள். சுகுணா அவர்களின் ஒரே செல்ல மகள் என்பதால் அவளுடைய தேவைகள் யாவும் சிரமமின்றி அவளுக்கு கிடைத்து வரலாயின. சுகுணா வளர்ந்து பெரியவள் ஆனதும், அவளுடைய எழிலும் , வனப்பும், ஊரிலுள்ள இளவட்டங்களை உறக்கம் தொலைக்க வைத்தது.சுகுணாவிற்கு இளைஞர்களின் காதல் பார்வை போதை தருவதாக இருந்தது. அந்த ஊரின்  பெரிய விவசாய குடும்பமான பெரியசாமியின் மகன் முரளிக்கும் சுகுணாவுக்கும் காதல் ஏற்பட்டது.



முரளிக்கு உண்மையிலேயே சுகுணாவின் மேல் காதல் இல்லை.அவனுக்கு அவளுடைய தேகம் மட்டுமே தேவையாய் இருந்தது. அவன் சுகுணாவை பயன்படுத்திக்கொள்வது ஒன்றே இலக்காக தன்னுடைய   நடவடிக்கைகளை  மிக சீராக திட்டமிட்டு நடத்திகொண்டிருந்தான் .ஆனால்  தனக்கு அவனுடன் ஏற்பட்ட காதலை மிக புனிதமாக எண்ணிய சுகுணாவோ தனக்கு நல்லதொரு வாழ்க்கை அமைந்து விட்டதாக  சந்தோஷ வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்தாள்.



முரளி எதிர்பார்த்ததை போல ஒரு சூழ்நிலை அமைந்தது. அவனை நம்பி அவனுடன் ஒரு சுற்றுலா தலத்திற்கு சென்ற  சுகுணா திரும்பி வரும்போது தன்னுடைய கற்பை இழந்திருந்தாள். இந்த நிகழ்வுக்கு பிறகு முரளியின் செய்கைகள் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. முதலில் இதை சாதாரணமாக எண்ணிய சுகுணா பின்னர் அவனுடைய முழுமையான புறக்கணிப்பை உணர தொடங்கினாள்.



முரளிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க தொடங்கியதை அறிந்த சுகுணா ,மிகவும்   கலக்கமுற்று நேரே அவனுடைய வீட்டிற்கு சென்று அவனுடைய  பெற்றோர்களிடம் நடந்தவைகளை கூறி தன்னை முரளியுடன் சேர்த்து வைக்கும்படி மன்றாடினாள். முரளியின் தந்தை பெரியசாமிக்கு ஜாதி மற்றும் ,அந்தஸ்து பேதங்கள் அந்த ஏழை பெண்ணின் கோரிக்கையை ஏற்க பெரும் தடையாக இருந்தது. திரண்டிருந்த ஊராரின் முன்னிலையில் முரளி ''சுகுணாவுடன் சாதாரண நட்பாக மட்டுமே பேசியதாகவும், காதலிப்பதாக ஒருபோதும் சொன்னதில்லை என்றும், அவளுடன் உறவுகொண்டதாக சொல்வது உண்மைக்கு புறம்பானது'' என்று அவன் கூறியபோது ,அவன் சொல்வது பொய் என்பதை உணர்ந்திருந்தும் , பெரியசாமியின் பணம் மற்றும் அதிகார செல்வாக்குக்கு பயந்த ஊர் மக்கள் அந்த அபலை பெண்ணிற்க்காக யாரும் பரிந்து பேச முன் வரவில்லை. பணக்காரவீட்டு பிள்ளையை வீண்பழி சுமத்தி தான் நினைக்கும் வாழ்க்கையை அமைக்க நினைத்தவளாகவே அவளை முரளியின் குடும்பத்தார் வசை பாடினர்.அறிவியல் முன்னேற்றமற்ற அந்த காலத்தில் சுகுணாவிற்கு தன் கூற்றை நிரூபிக்க எந்த வசதியும் இல்லாமல் போனது. தன் கோரிக்கைகள் நிறைவேறும்வரை அந்த இடத்தை விட்டு நகரபோவதில்லை என்று உறுதி கூரியவளாய் சுகுணா முரளியின்  வீட்டின் முன்பு அமர்ந்து போராட துவங்கினாள்.  அடுத்த இரண்டு நாட்கள் அன்ன ஆகாரமின்றி அந்த பேதை பெண் நடத்திய சத்தியாகிரகம் அந்த கல்மனம் கொண்ட பணக்கார வர்கத்தினரின் முன்பு எடுபடாமல் போனது. ''முரளி என்னும் கயவன்  காமப்பசிக்காக காதலை ஆயுதமாக கொண்டு தன்னுடைய கற்பை சூறையாடி விட்டானே'' என்ற சுகுணாவின் மன குமுறலை பிரதிபலிக்கும் விதமாக வானமும் , இடி மின்னலுடன் தன் பேய்மழையை   கொட்டி தீர்க்க ஆரம்பித்தது.







அதுவரை நடந்த நிகழ்வுகளால் மிகவும் மனமுடைந்து மகளின் மேல்  கோபமாயிருந்த  சுகுணாவின் பெற்றோர்கள் , கொட்டும் மழையில் இறக்கமற்றவர்களின் வீட்டின் முன்பு பரிதவிக்கும் மகளின் நிலையை கண்டு மனம் இறங்கி , வாழ்க்கை போனால் போகிறது , இறுதிவரை தங்களுக்கு மகளாகவே மட்டும் இருந்தால் போதும் என்று கூறி அவளை ஆறுதல்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்கள்.



அதன்பின்னர் முரளிக்கு பெரிய வசதியான இடத்தில்   விமரிசையாக திருமணம் நடந்தது. காலங்கள் கடந்தன. முரளியின் பிள்ளைகள் இப்போது கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறார்கள். தன் தாய் தந்தையின் மறைவுக்கு பிறகு சுகுணா தனிமரமாக உழைத்து பிழைத்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்று வாழ்க்கை ஏதும் அமையவே இல்லை .தன் கற்பை சூறையாடி தன் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிவிட்டானே என்று முரளியை நினைத்து வெதும்பும் சுகுணாவின் முகத்தில், எப்போதும் தான் எமாற்றப்பட்டுவிட்டோமே என்ற இயலாமை

குடிகொண்டிருக்கிறது. அவளை காணும் ஊர்மக்களின் முகத்தில், ''இந்த அபலை பெண்ணிற்க்காக அன்று உண்மையை சொல்லி பரிந்து பேசாமல் அவளுக்கு நேர்ந்த அநீதிக்கு தாமும் காரணமாகி விட்டோமே'' என்னும் ஆதங்கம் தோன்றுகிறது.ஆனால் இன்றுவரை ஒரு ஏழை பெண்ணை ஏமாற்றி தன் காதல் நாடகத்தின் மூலம் அவளின் கற்பை களங்கப்படுத்தி ,ஏற்றுக்கொள்ள அவள் மன்றாடியபோதும், இரக்கமற்று , அவளை வஞ்சித்த ,குற்றஉணர்வின் சாயல் மட்டும் முரளியின்முகத்தில் இன்றளவும் தோன்றவே இல்லை. முரளி போன்றோர்கள் ஊரில் நிறைய தோன்ற ஆரம்பித்து விட்டார்கள் எனவே சுகுணா போன்றோர்கள் தான் இனி கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம் .






   ----சே. தரணிகுமார்




Friday 30 October 2009

ஊனம்










பெருத்த உடலோடு கால்கள் சூம்பிய நிலையில் முகம் விகாரமாக பார்க்க அச்சம் தரக்கூடிய தோற்றத்தில் இருந்த பாபுவை அவன் தாய் புவனாவுக்கு சற்றும் பிடிப்பது இல்லை. புவனா மிகவும் அழகாக இருப்பவள். சிறு பிராயம் முதல் அவளுக்கு தன் அழகின் மீது அதீத கர்வம் இருந்தது, அந்த கர்வத்தின் வெளிப்பாடு அவளை சுற்றி இருப்பவர்களுக்கு எப்போதும் துன்பம் தருவதாக இருந்தது. அவளுடைய அப்பா புவனாவை தன் சகோதரியின் மகனுக்கு மணமுடித்தபோது அதை  புவனா கொஞ்சம் கூட விரும்பவில்லை. ஆனால் தந்தையின் சொல் மீறி அவளால் எதுவும் செய்ய இயலாமல் போய்விட்டது.

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கருவுற்ற    புவனா , அந்த தாய்மையினால்  சிறிதும்  சந்தோசம் கொள்ளவே இல்லை. அதை  ஒரு சுமையாகவே கருத தொடங்கினாள். அந்த கருவை அழிக்க அவள் எடுத்த எல்லா நடவடிக்கைகளின் விளைவு இன்று பாபுவை நிரந்தர குரூரமாய் , ஊனமாய்  மாற்றி இருந்தது. தன் குழந்தையின் ஊனத்தை பற்றி அவள் சிறிதும் கவலைபட்டவள் அல்லள் . தன் தந்தை இறந்த பிறகு புவனாவின் போக்கு முற்றிலும் மாறி விட்டது. அவள் கணவனை விட்டு வேறு ஒருவருடன் இணக்கமாகி போனாள். இதனால் வெறுத்துப்போன அவள் கணவன் எங்கோ கண்காணாமல் போய்விட்டான் .

பாபுவை சிறு பிராயம் முதல் அவன் பாட்டி கமலா தான் பராமரித்து வந்தாள். பாபு அதிகமாக பசி எடுக்கும்போது மட்டுமே  சிலவகையான சப்தம் எழுப்புவான். அவனுடைய பசியின் சப்தம் பாட்டியை தவிர மற்றவர்களுக்கு நாராசமான ஒலியாகவே கேட்டது. அவனுக்கு உணவு ஊட்டுவது முதல் சுத்தபடுத்துவது வரை கமலா பாட்டியை  தவிர  வேறு  யாரும் பாபுவை  அணுகியதே  இல்லை. அந்த வீடு பெரிய பணக்கார தோரணையோடு இருந்தாலும் அங்கிருப்பவர்களின் மனம் மிக குறுகியதாக இருந்தது. பாட்டியை தவிர மற்றவர்கள்  பாபுவை ஒரு உயிரினமாக கூட கருதவில்லை .

திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் ஒருநாள் கமலா பாட்டிக்கு உயிர் பிரிந்து விட்டது. கமலா பாட்டிக்காக எல்லோரும் அழுதுகொண்டிருந்தனர். சுவற்றின் ஓரமாக உட்கார்ந்து பாட்டியையே  வெறித்து பார்த்து கொண்டிருந்த பாபுவை கண்டு, இனி யார்  அவனை பராமரிக்க போகிறார்களோ என்று  ஊர்மக்கள் மிகவும் கவலை பட்டனர்.அன்று மாலை கமலா பாட்டியின் அடக்கம் முடிந்து போனது. அன்றைய இரவு முதன்முறையாக  புவனா பாபுவுக்கு உணவு ஊட்ட எத்தனித்தபோது  பாபு  பிடிவாதமாக  உணவை ஏற்க மறுத்துவிட்டான் .கால்களால் தவழ்ந்து  அவளிடமிருந்து விலகி தூரமாய் சென்று  அமர்ந்து கொண்டான்.புவனாவுக்கு அவனுடைய செய்கைகள் எரிச்சலூட்டுவதாக இருந்தது. வயிறு காய்ந்து போனால் யார் ஊட்டினாலும் தின்ன தொடங்கி விடுவான் என்ற அலட்சியத்தோடு புவனா சென்று விட்டாள்.  

மறுநாள் காலை பாபுவை வந்து பார்த்த புவனாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  பாபு  உயிரற்ற   சடலமாக  கிடந்தான். பன்னிரண்டு வருடங்கள் தன்னை காத்து வளர்த்த பாட்டியின் பிரிவை தாங்காத   அந்த மனவளர்ச்சியற்ற ஊனமான குழந்தை இனியும் இந்த உலகத்தில் தனக்கென  யாரும் இல்லை என்றெண்ணி  வாழ பிடிக்காமல் தன் பாட்டி போன இடத்திற்கே போய் விட்டது.பாபு பேசுபவனல்ல , அவனால் எந்த உணர்வுகளையும் புரிந்து கொள்ள இயலாது என்று அவனை ஒரு ஜடப்போருளாகவே கருதிய புவனாவுக்கு , அவன் மனமும் , அதன் உணர்வுகளும்  முதன்முறையாக புரிய தொடங்கியது.

பாபு போன்ற எண்ணற்ற குழந்தைகள் ஊனமாக பிறந்ததின் ஒரே காரணமாக பெற்றோர்களின் அரவணைப்பை இழந்து அநாதை ஆக்கப்படுகிறார்கள். இது அவர்கள் வேண்டி வாங்கிய வரம் அன்று. கடவுளின் மறு உருவமாக உணரப்படும் தாய்க்கு பிள்ளைகளின் ஊனம் , அவர்களை வெறுக்கும் காரணியாக அமைவது எத்துணை துரதிஷ்டவசமானது. எந்த சூழ்நிலையானாலும் நாம் பெற்ற பிள்ளைகளை பேணி காப்பது நம்முடைய கடமைதான் என்பது புவனா போன்ற பெண்களுக்கு புரிவதே இல்லை.






--சே.தரணி குமார் 

Wednesday 28 October 2009

சேவை





நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது ஒரு கண்சிகிச்சை முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிக பெரிய அளவில் கூட்டம் வரும் என்பதால் , அதை நடத்துவது குறித்து பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. கல்லூரியின்  என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்களில் விருப்பமானவர்களை கொண்டு ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் அறுபது மாணவர்களும் மாணவிகளும் சேவை செய்ய
முன்வந்தனர்.             

குறிப்பிட்ட தினத்தில் கண்சிகிச்சை முகம் தொடங்கியது. எதிர்பார்த்ததை விட கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது .வயது முதிர்ந்தவர்கள் கண்புரை நீக்கவேண்டி அதிகம் வந்திருந்தனர். வந்திருந்தவர்களில்   
இருநூற்றி முற்பது நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவானது. வந்திருந்தவர்களை ஆறு குழுக்களாக பிரித்து அவர்கள் முகாமை விட்டு போகாதவன்னம் பார்த்துக்கொள்வது மிகுந்த சிரமமாய் இருந்தது. அறுவை சிகிச்சைக்காக தங்கபோகும் விஷயத்தை தங்கள் பிள்ளைகளுக்கு தெரிவிக்க அவர்கள் மிகவும் முனைந்தனர். ஆனால் அப்படி தகவல் தெரிந்தும் ஒரு சிலருக்கு மட்டுமே உறவினர்கள் துணைக்கு வந்தனர். பெரும்பான்மையினருக்கு உதவ யாரும் வரவே இல்லை .


அன்றைய மறுநாள் அனைவருக்கும் அறுவை சிகிச்சை நடந்தேறியது. அடுத்த மூன்று நாட்கள் அவர்கள் அங்கேயே தங்கி தையல் பிரித்தவுடன் வீடு திரும்பலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. முதல் இரண்டு நாட்களுக்குள்ளேயே மாணவர்களில் பாதி பேர் முதியவர்களுக்கு சேவை செய்வதை விரும்பாமல் , அதை சிரமமாக எண்ணி விலகி கொண்டனர். மீதமுள்ள நாங்கள் முப்பது நபர்கள் மட்டும் அடுத்த இரண்டு நாட்கள் இரவு பகலாக சிறிதும் உறக்கம் ஒய்வு இன்றி  அந்த முதியவர்களுக்கு கண் கட்டு பிரிக்கும்வரை  எங்களால் இயன்ற சேவைகளை செய்து கொண்டிருந்தோம். கடைசி நாள் அவர்கள் அவர்கள் கண் கட்டுகள் பிரிக்கப்பட்டு அவர்கள் பார்வை சீரானதும் அவர்களோடு சேர்ந்து எங்களுக்கும் அளவில்லா மகிழ்ச்சி உண்டானது.


இறுதி நாளில் எங்கள் கல்லூரியின் சார்பில் எளிய பிரிவு உபசார விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பேசிய எங்கள் கல்லூரி முதல்வர் எங்களை சுட்டி காட்டி , ''இதோ இங்கிருக்கும் இந்த முப்பது பிள்ளைகளும் உங்கள் உறவுகளுக்கு நிகராக மிக்க கனிவோடு உங்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்திருக்கிறார்கள். இந்த பிள்ளைகளுக்கு என்று தருவதற்கு உங்களிடம் பணமோ , பொருளோ இல்லாமல் இருக்கலாம் ஆனால், இந்த பிள்ளைகள் தங்கள் பிற்கால வாழ்வில் நல்ல வேலையும், குடும்பமும் அமைந்து சிறப்பாக வாழ வேண்டும் என்று மனதார  வாழ்த்தும் மனம் உங்களிடம் இருக்கும் என்று கட்டாயம் நம்புகிறேன்'' என்று கூறியவுடன் அத்துணை பேரும் எழுந்து நின்று எங்களுக்காக கை கூப்பி மனமுருக பிரார்த்தித்தனர். அந்த நிகழ்வு எங்களுக்கு பெரும் சந்தோசத்தையும் மனநிறைவையும் தந்தது. 

இன்று நல்ல வேலை, நல்ல குடும்ப சூழல் என மனநிறைவான வாழ்க்கை  எங்களுக்கு அமைய  எங்கள் படிப்பும் , குடும்பமும்  இன்ன பிற எண்ணற்ற காரணங்களும் இருந்தாலும் , அன்று எங்கள் சேவையின் காரணமாக எங்கள் வாழ்க்கை வளம்பெற வாழ்த்திய அந்த முதியவர்களின் கூட்டு பிரார்த்தனையும்  எங்களின் வளர்ச்சிக்கு  ஒரு மறுக்க முடியாத காரணமாக இருக்கிறது என்பதை என்மனம் ஆழமாக நம்புகிறது.



----சே. தரணிகுமார்
  

Monday 19 October 2009

உயிர்மூச்சு





எழுபது வயதை கடந்த சரஸ்வதி பாட்டிக்கு கண்பார்வை மிகவும் மங்கி போயிருந்தது. காதுகளின் கேட்கும் திறன் மட்டும் குறையாமல் இருந்தது. அவருடைய சொந்த பந்தங்களிலேயே சரஸ்வதி பாட்டி தான் வயதில் மூத்தவர். இறந்து போன மூத்த மகனோடு சேர்த்து  சரஸ்வதி பாட்டிக்கு மூன்று பிள்ளைகள். அனைவருக்கும் திருமணமாகி அவர்கள் பிள்ளைகளுக்கும் பிள்ளைகள் பிறந்திருந்தது. இளைத்த உருவத்துடன் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க கூடியவரான சரஸ்வதி பாட்டி கடந்த நான்கு மாதங்கள் முன்புவரை எல்லோரையும் போல வயல்வேலைகளுக்கு சென்று கொண்டிருந்தவர்தான். அவருக்கு வந்த காய்ச்சல் ஒரு மாதம் நீடித்ததில் மிகவும் வாடிப்போன சரஸ்வதி பாட்டி ,இருமுறை தவறி விழுந்ததில்,கடந்த ஒருமாதமாக படுத்த படுக்கையாகி ,நான்கு நாட்களாக மிகுந்த கவலைக்கிடமாக மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார்.

சரஸ்வதி பாட்டிக்கு முற்றிலும் பேச இயலாமல் போயிருந்தது. கடந்த நான்கு நாட்களாக தன் உறவுகள் எல்லாம் கூடி தன்னுடைய மரணத்தை பற்றி இடையறாது பேசிக்கொண்டிருந்தது சரஸ்வதி பாட்டிக்கு நன்கு கேட்டுக்கொண்டிருந்தது.இது அவருக்கு தாங்க முடியாத மன வேதனையை உண்டாகி இருந்தது. மரணம், எப்போதும் எவருக்கும் எதிர்பார்க்ககூடிய ஒன்றாக இருந்ததில்லை.  மரணம் நேருமே என்ற நினைவே பலருக்கும் பெரும் வேதனையை தரக்கூடியதாக இருக்கிறது.முற்றிலும்  இயலாமல் போய்விட்ட காலத்திலும் கூட  எவருக்கும் துணிந்து மரணத்தை எதிர்கொள்ளும் பக்குவம் அத்துணை சுலபமாய்  வந்து விடுவதில்லை.

திடீரென்று மரணமடையும் ஒருவருக்காக மிகவும் பரிதாபப்படுபவர்கள் , நீண்ட நாட்களாக நோயுற்றிருந்து மரணத்தை எதிர்நோக்கி காத்திருந்து இறந்து போகிறவர்களுக்காக அத்துணை பரிதாபம் கொள்வதே இல்லை .உறவுகளுக்கு  கூட ஒருவித சலிப்பு வந்து விடுகிறது. எல்லாமே பண்டமாற்றாகிபோன வணிக உலகில் மனங்களுக்கு இடையேயான இடைவெளிகள் அதிகரித்து ,உறவுகளை பேணுவதும் அரிதான காரியமாகிவிட்டது.

சரஸ்வதி பாட்டியை பார்க்க வந்திருந்த உறவினர்கள் அவரின் உயிர் பிரிய வேண்டி ஆளுக்கொரு உபாயம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவருக்கு விருப்பமானவர்களை விட்டு வாயில் பாலூற்ற சொல்லிவிட்டு, ஒழுங்கீனமாய் ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவருடைய மார்புகூட்டின் சுவாசம் நின்று போனதா என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்கள்.இதேபோல உயிருக்கு இழுத்துக்கொண்டிருந்த தன் பாட்டிக்கு தங்கத்தை உரசி தண்ணீரோடு புகட்டியபின் உயிர் பிரிந்ததாக , ஒரு உயிரை வதைத்து கொன்ற பாவத்தை சற்றும் உணராதவராக, நான்காவது வீட்டு ஆறுமுகம் சொன்னபோது,அதையும் செயல்படுத்தி பார்த்து விட்டார்கள்.மறுநாளும் உயிர் பிரியாது வாழ எத்தனித்துக்கொண்டிருந்த  சரஸ்வதி பாட்டியை கண்டு அவருடைய மருமகள்கள் முகம் சுளித்து தங்கள் விரக்தியை வெளிக்காட்டினர்.அந்த வீட்டின் குழந்தைகள் மட்டும் உயிர்வதை பட்டுக்கொண்டிருந்த பாட்டியை எட்டத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அன்றைய தினம் கிருத்திகை நட்சத்திரம் என்றும் , உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு அன்றைய தினத்தில் உயிர் பிரிந்துவிடும் என்று ஊரில் பரவலாக பேசிக்கொண்டார்கள்.ஆனால் பாவம் என்ன காரணத்தினாலோ , சரஸ்வதி பாட்டியின் ஜீவனற்ற எலும்புகூடு தேகத்தில் உயிர் எங்கேயோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது.அதற்க்கு அடுத்த நாள் வேறொருவர் தந்த யோசனைப்படி சரஸ்வதி பட்டியின் உயிர் பிரிய வேண்டி , அவரை குளிர்ந்த நீரில் குளிப்பாட்டி சிறிது நேரம் வெயிலில் கிடத்தி இருந்தார்கள்.  சரஸ்வதி பாட்டியின் மனதில் ஒரு அசாத்திய வெறுமை பரவிகிடந்தது. கடந்த இரண்டு நாட்கள் முன்புவரை இறந்து போன தனது கணவரையும் , மூத்த மகனையும் பற்றி சிந்திக்க முடிந்த சரஸ்வதி பாட்டிக்கு இப்போது அதுவும் இயலாததாகிவிட்டது.

மரணம் தன்னை நெருங்காதா என்ற சரஸ்வதி பாட்டியின் ஏக்கம் , அவர் மரணத்திற்காக எதிர்பார்த்திருக்கும் உறவுகளின் ஏக்கத்தை விட சற்று அதிகமானதாக இருந்தது.பாட்டியின் மரணத்திற்காக மேற்கொள்ளப்பட பலவித முயற்சிகளும் பலிதமாகாமல் போனதால் உறவுகள் சலித்து கொள்ள  தொடங்கி இருந்தது.வெளியூரில் இருந்து வந்திருந்தவர்கள் அவரவர் வேலையை பார்க்க நாளை ஊர் திரும்பலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருந்த அந்த இரவில் தேய்பிறை நிலவு  மங்கிய வெளிச்சத்தோடு மேகங்களின் ஊடே மறைந்து கொண்டிருந்தது. எங்கும் இருள் கவிழ்ந்த அந்த நடு நிசியில் யாருமற்ற தனிமையில் கிடத்தப்பட்டிருந்த சரஸ்வதி பாட்டிக்கு இரண்டு முறை பெரிய விக்கல் வந்தது.தண்ணீருக்காக அவர்  மனம் ஏங்கியது . மூன்றாவது விக்கல் வர எத்தனித்தபோது சப்தமின்றி சரஸ்வதி பாட்டியின் உயிர்மூச்சு அடங்கி போனது.

மறுநாள் காலையில் கோழிகளை விரட்டிக்கொண்டு வந்த அந்த வீட்டு குழந்தைகள் சரஸ்வதி பாட்டியை எறும்புகள் மொய்திருப்பதை கண்டு சொன்னபிறகே உறவுகளுக்கு சரஸ்வதி பாட்டி இறந்து போனது தெரிய வந்தது. அதுவரை இறந்துபோக மாட்டாரா என்று எண்ணற்ற வழிகளை யோசித்தவர்கள் , ஒரு பொய்யான அழுகுரலோடு அவரின் மரணத்திற்கு துக்கம்  அனுஷ்ட்டிக்க தொடங்கினர்.            

வயது முதிர்ந்து,  நோயுற்று ,மரணத்தை தழுவும் எல்லோருக்கும் இறுதி வரை தன்னுடைய உறவுகளின் அன்பான கவனிப்பு கிடைத்து விடுவதில்லை. அவர்களின்  மரணம்  உறவுகளால் மிகவும் எதிர்பார்க்கபடுகிற நிகழ்வாக  அமைந்து விடுகிறது.மரணமுறுகிறவர்களின் மனதின்   வலிகளை நெருங்கிய உறவுகள் கூட உதாசீனப்படுத்தி விடுகின்றன.யாருமற்ற இரவில் தனிமையில் நடந்து போகும் குழந்தையின் மனோ நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். இயலாமையுடன் அவர்கள் விடும் மூச்சு காற்றின் சப்தம் அவர்களுக்கே மிக கொடூரமாய் கேட்க தொடங்கி விடுகிறது.மரணத்தை இருகரம் கூப்பி அவர்கள் அழைத்து கொண்டே இருந்தாலும் , அது அவர்களுக்கு ஒளிந்து கண்ணாமூச்சி  விளையாடும் குழந்தையாய் அவர்கள் முன்பு கண் சிமிட்டி சிரித்துக்கொண்டிருக்கிறது.


--சே. தரணி குமார்

Saturday 17 October 2009

சைக்கிள்









நாங்கள் வசித்த அந்த அரசு அலுவலர் குடியிருப்பு எப்போதும் அசாத்திய சூழ்நிலையுடன் மிகவும் ரம்மியமாக இருக்கும்.அங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் உயர்தட்டு அரசு  அலுவலர்களாக இருந்ததினால் அங்கு எந்த பிரச்னையும் எப்போதும் வந்ததில்லை.அந்த குடியிருப்பு பகுதியில் பல்வேறு நண்பர்கள் வட்டங்கள் இருந்தாலும் எங்கள் நல்லபண்புகளால்    அந்த குடியிருப்பினர் எங்கள் நட்பு வட்டத்தை பற்றி உயர்வாக     பேசிக்கொண்டார்கள்.எங்கள் குடியிருப்பு பகுதியை ஒட்டி ஒரு பஞ்சாலையின் குடியிருப்பு ஒன்று இருந்தது.அதன் அருகில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் நாங்கள் கிரிக்கெட் விளையாடும் போது  அந்த குடியிருப்பு பகுதியில் இருந்து வந்த மோகன் எங்களுடன் பழகலானான் . பின்னர் அவனுடைய ஒத்த பண்புகளாலும் , நல்ல இயல்புகளாலும் மிக விரைவிலேயே எங்கள் நட்பு வட்டத்தில் நெருங்கிய நண்பனாக மாறிவிட்டான்.

மோகன் குடும்பம் மிக ஏழ்மையானது .அவனுடைய அப்பா  பஞ்சாலையில் நிரந்தரமில்லாத தினக்கூலி வேலை செய்து வந்தார்.குடும்ப சூழ்நிலையால் மோகன் எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க இயலவில்லை. அவன் ஒரு மின் இணைப்பு வேலை செய்பவரிடம் உதவியாளனாக வேலைக்கு சேர்ந்து ,மூன்று வருடங்களில் சொந்தமாக சிறு மின் வேலைகளை எடுத்து செய்து வரலானான் .எங்கள் நட்பு வட்டத்தில் அனைவரிடத்தும் இரு சக்கர வாகங்கள் இருந்த போதிலும் ,நாங்கள் பலமுறை வற்புறுத்தியபோதும் மோகன் ஒருபோதும் எங்கள் வாகனங்களை வாங்கி சென்றதே இல்லை.அவனுக்கு என்று சொந்தமாக ஒரு சைக்கிள் கூட அவனிடம் இருந்ததில்லை. தொலைதூர வேலை என்றால் வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு   சென்று விடுவான்.












நீண்ட காலமாக மோகனுக்கு  சுயமாக ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.அதை பற்றிஅவன் நிறைய கனவுகள் கொண்டிருந்தான்.எங்களிடம்     அதனை  எப்போதும்    சொல்லிக்கொண்டே இருப்பான். தன்        உழைப்பில்  வீட்டு   செலவுகளுக்கு தந்தது போக மீதம் இருக்கும் பணத்தை மிக சிரமப்பட்டு சைக்கிள் வாங்க வேண்டி சேமித்து வைத்து கொண்டிருந்தான். நாங்கள் பலமுறை அவனுக்கு சைக்கிள்   வாங்க பண உதவி செய்ய முற்பட்டோதும் , சுயமான  உழைப்பினாலேயே  தன்னுடைய      லட்சியத்தை அடைய நினைப்பதாக இனிமையாக கூறி எங்கள் பண உதவிகளை மறுத்து விடுவான் .










ஒருமுறை,நண்பனுடைய அண்ணனின் திருமணத்திற்காக நாங்கள் அனைவரும் பக்கத்து ஊருக்கு சென்றிருந்தோம் .இரவு நெடுநேரம் வரை  நாங்கள்  அனைவரும் தூங்காமல்பேசிக்கொண்டிருந்தோம்.மோகன் மிக  இனிமையாக  பாடக்கூடியவன் .                 அன்றைய     தினம் மோகன் மிக இனிமையான பாடல்களாக பாடி மிகவும் உற்சாகமாய் இருந்தான்.காரணம் கேட்டபோது தான் வேலை செய்து கொண்டிருக்கும் வீட்டின் மின் இணைப்பு வேலைகள் நாளையுடன் முடிவடைவதாகவும் ,அவர்கள் தரப்போகும் மீத பணம் கொண்டு தன்னுடைய நீண்ட நாள்  கனவான சைக்கிளை  வாங்க  போவதாகவும், அந்த தருணத்தில் நாங்கள் அவனுடன் இருக்க வேண்டுமென்றும் அவன் கேட்டுக்கொண்டதை எங்களால் மறுக்க முடியவில்லை.அவன் சைக்கிள் வாங்க போவது அவனுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்  மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியது.

மறுநாள் திருமணம் முடிந்து நாங்கள் அன்றைய தினம் வெளியான ஒரு புது திரைப்படத்திற்கு செல்வதென்று முடிவானது. எவ்வளவோ வற்புறுத்தியும் மோகன் வேலையை காரணம் காட்டி எங்களுடன் வர மறுத்துவிட்டான். மாலையில்  அவன் சைக்கிள் வாங்க செல்லும்போது எல்லோரும் சேர்ந்து செல்வதென முடிவு செய்துக்கொண்டு மோகனை தவிர்த்து நாங்கள் மட்டும் திரைப்படத்திற்கு சென்று விட்டோம். திரைப்படம் முடிந்து திரும்பிக்கொண்டிருந்த எங்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.மின்சார இணைப்பு கொடுக்க போன இடத்தில , துரதிர்ஷ்டவசமாக மின்சாரத்தில் சிக்கி மோகன் உயரிழந்து விட்டிருந்தான். காலைவரை எங்களுடன் இனிமையாக பேசிக்கொண்டிருந்த எங்கள் நண்பனை உயிரற்ற சடலமாக பார்த்தபோது எங்களால் அதை சற்றும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

எங்களின் நெஞ்சில் நிறைந்த இனிய நண்பன் ,எங்களின் தோள்கள் மீது பயணித்து தன்னுடைய இறுதி ஊர்வலத்தை முடித்துக்கொண்டு மீளா துயிலில் ஆழ்ந்துவிட்டான். அந்த ஏழை குடும்பத்து தன்மான இளைஞனது சைக்கிள் கனவு பகல் கனவாக நிறைவேறாமலேயே போய்விட்டது. இப்போது நாங்கள் அனைவரும் படித்து முடித்து நல்ல வேலையில் நிறைவாக இருந்தபோதும்,வசதியான கார்களில் பவணி வந்தபோதும் எங்கேயாவது புது சைக்கிள் கடைகளில் விற்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள்களை பார்க்கும் போது மோகனின் நினைவுகளால் மனது கணமாகிவிடுகிறது.






----சே.தரணி குமார்

Thursday 15 October 2009

வாழ்க்கை







சடங்கு சம்பிரதாயம் என்று கடந்த பதினைந்து நாட்களாக நடத்தப்பட்ட எல்லா  நிகழ்ச்சிகளிலும்  ஒரு காட்சி பொருளாக மட்டுமே  நடமாடிய பவித்ராவுக்கு வாழ்க்கையே மிக இருண்டு போனதாக தோன்றியது. நகருமில்லாத கிராமமும் இல்லாத அந்த ரெண்டும் கெட்டான் ஊரில் பவித்ராவின் கணவன் ரவி தற்கொலை செய்துகொண்டு இறந்து போன பிறகு, கடந்த பதினைந்து நாட்களாக பவித்ராவுக்கு ஏராளமான சடங்குகள் நடத்தப்பட்டு நேற்றோடு அவளுடைய பூவும் பொட்டும்  நிரந்தரமாக அவளிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.


 மூன்றாம் வகுப்பும், ஒன்றாம் வகுப்பும் படிக்கும் தன் இரண்டு பெண்குழந்தைகளோடு இந்த உலகில் எப்படி காலம் தள்ளபோகிறோம் என்ற கேள்வி அவள் முன்னாள் பூதாகரமாய் நின்று அவளை மிரட்டியது.பவித்ராவும், ரவியும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டவர்கள் ,கடந்த வருடம் முன்பு வரை மிக இனிமையாக சென்று கொண்டிருந்த அவர்கள் இல்லறத்தில் சமீபத்தில் தான் வீணான சச்சரவுகள் தோன்ற ஆரம்பித்தன.ரவி காதல் திருமணம் செய்துகொண்டது அவனது வீட்டாருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியதால் உறவுகள் மிகவும் சீர்கெட்டு போனது.இந்த திருமணம் பவித்ராவின் வீட்டிலும் கோபத்தை ஏற்படுத்தினாலும் அவர்கள் மட்டும்  அவளை மன்னித்து ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.




ரவியின் வீட்டு நிலவரம் முற்றிலும் மாறாக இருந்தது. இரண்டு குழந்தைகள் பிறந்தபிறகும் அவர்களின் கோபம் தனியவே இல்லை ,இறுதியாக கடந்தவருடம் ரவியின் அப்பா தன்னுடைய சொத்துக்களை பிரிக்கும்போது மீதம் இருக்கும் இரு மகன்களுக்கு மட்டுமே சேரும்படி எழுதிவிட்டது ரவியின் மனதில் பெருத்த தாக்கத்தை உண்டாக்கிவிட்டது. இதனால் அவன் தன்னுடைய குடும்ப உறவுகளை முற்றிலும் அறுத்துக்கொண்டான் .பவித்ரா மட்டும் தன்னுடைய உறவுகளோடு புழங்குவது அவனுள் எரிச்சலையும் பொறாமையையும் ஏற்படுத்தியது இது நாளாவட்டத்தில் ரவியின் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை புகுத்தி  விட்டது.இதனை பவித்ராவிடம் வெளிப்படையாக பேசாமல் வேறு  வேறு காரணங்களுக்காக சண்டை பிடிக்க ஆரம்பித்தான்.



தன்னுடைய அன்பான கணவன் ,இப்படி வீணாக சண்டையிடுவதின் காரணங்களை ஆராயாமல், அவனுடைய மன உணர்வுகளை புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லாமல் , அவளும் ரவியுடன் வாக்குவாதம் செய்ததுடன் தேவையற்று , கணவன் மனைவி பிரச்சனையை தன்னுடைய வீடு வரை எடுத்து சென்றுவிட்டாள் . இதனால் இன்னும் வெறுப்புற்ற ரவியின் போக்கு முற்றிலுமாக மாறதொடங்கியது



இவர்களுடைய இந்த பிரச்சனைகளால் குழந்தைகளின் இயல்பான சந்தோஷங்கள்  யாவும் முற்றிலும் அழிந்துபோனது.அவர்களுடைய படிப்பும் மந்தமானது.எப்போது அப்பாவும் அம்மாவும் சண்டையிட்டு கொள்வார்களோ என்ற பயத்துடன் அந்த பிஞ்சுகள் அஞ்ச தொடங்கின. குழந்தைகளை பற்றி கவலைப்படாமல் ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுக்கும் மனோபாவம் இன்றி , தாங்கள் காதலித்து திருமணம் புரிந்தவர்கள் என்பதை முற்றிலும் மறந்து , இருவரும் நிரந்தர எதிரிகள் போல தங்களின் சண்டைகளை தொடர்ந்துகொண்டிருந்தனர்.



கடந்த இருபத்து நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரிய பிரச்சனையில்,பவித்ரா குழந்தைகளை அழைத்துக்கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்றுவிட , நான்கு நாட்களுக்கும் மேலாக பொறுத்து பார்த்த ரவி,பவித்ரா திரும்ப வராததால் ,தன்னுடைய பிரச்சனைகளை பேசி தீர்த்து கொள்ளும் பக்குவம் இன்றி,தன்னை நம்பி இந்த உலகில் மூன்று பெண்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து,சுயநலத்தின் உச்சகட்டமான தற்கொலையை தேர்ந்து எடுத்துக்கொண்டான்.

ரவியின் மரணம் பவித்ராவின் மனதில் கிழைத்து,  தழைத்து பெருமரமாக வேரூன்றி இருந்த வீம்பையும் வீராப்பையும் அடியோடு புரட்டி போட்டுவிட்டது.கணவனுடன் பேசி பிரச்சனையை தீர்த்துகொள்ளாமல், இப்படி தான் நடந்து கொண்டதனாலேயே ரவி இப்படி மனம் வெறுத்து இத்தகைய முடிவை எடுதுக்கொண்டுவிட்டானே என்ற குற்ற உணர்வு அவளை சித்ரவதைக்குள்ளாக்கியது



கணவனை இழந்த இளம் பெண்கள் என்னதான் ஒழுக்கமாக வாழ்ந்தாலும் அவர்களை கேலிக்கும் கிண்டலுக்கும் உரிய கருப்பொருட்களாக மாற்றி அவர்களின் அன்றாட நிகழ்வுகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் இந்த சமூகம் கற்பிப்பதை பவித்ரா நன்கு அறிவாள்.வயது வித்தியாசமின்றி வக்கிர பார்வைகளோடு அலையும் ஒரு சில ஆண்களால் கணவனை இழந்த பெண்களுக்கு அதே ஊரில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும் பவித்ராவுக்கு தெரியும்.தன் உள்ளத்து குமுறல்களை எல்லாம், தன்னுடைய கண்களின் கண்ணீர் தீரும்வரை தன் தாயின் மடியில் படுத்து  அடிக்கடி கொட்டி தீர்த்து கொண்டாள்.



சிறிது காலம் கழித்து தொலை தூர ஊரில் முதியோர் இல்லமும் சிறார் பள்ளியும் இணைந்த காப்பகத்தில் பவித்ரா அலுவலக வேலையில் சேர்ந்து விட்டாள். தன் வேலை நேரம் போக மீதம் இருக்கும் நேரங்களில் அங்கு இருக்கும் வயதான முதியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறாள் .பவித்ரா தன் இரு குழந்தைகளோடு காப்பக குடியிருப்பிலே தங்கி இருக்கிறாள் . பவித்ராவின் குழந்தைகள் இப்போது நன்கு படிக்கிறார்கள் . பவித்ரா தன் குழந்தைகளுக்கு குடும்பத்தையும் , சமூகத்தையும் அனுசரித்து வாழ்வதை மிக அழகாக பயிற்று வருகிறாள் .தன்னை போலன்றி தன் குழந்தைகள் எந்த சூழ்நிலையிலும் சரியான முடிவு எடுப்பவர்களாக இருப்பவர்களாக வளர்வது கண்டு பவித்ரா மிகுந்த மனநிறைவோடு இருக்கிறாள் .

                                                    

                                                    

                         
                              
                    

 விட்டுகொடுப்பவர்கள் கெட்டுபோவதில்லை .

          கெட்டுபோகிறவர்கள் விட்டுகொடுப்பதில்லை .



--சே.தரணி குமார்.

.

Wednesday 14 October 2009

லட்சுமி பாட்டி



அந்த சிறிய கிராமத்தில் லட்சுமி பாட்டியை பற்றி தெரியாதவர்கள் நிச்சயம் யாரும் இருக்கவே முடியாது.அந்த ஊரில் எங்கு குழந்தை பிறப்பு என்றாலும் , எங்கு பூப்பெய்தல் நடந்தாலும் , கல்யாண வீடானாலும், இழவு வீடானாலும், லட்சுமி பாட்டியை முதல் ஆளாக அங்கு கட்டாயம் எதிர்பார்க்கலாம் .  ஊரின் நிகழ்வுகளை     தன் சொந்த வீட்டின் நிகழ்வினை போல எண்ணுவதோடு இயன்ற அளவிற்கு உதவும் உள்ளம் படைத்தவர்.




லட்சுமி பட்டிக்கு இரண்டு மகன்கள் .மூத்த மகன் வெளி நாட்டிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டதால் லட்சுமி பாட்டி தன்னுடைய இரண்டாவது மகனுடனேயே இருக்கும்படி ஆகிவிட்டது. லட்சுமி பாட்டியின் பரோபகார குணம் அவரது மகனுக்கு கொஞ்சமும் பிடிப்பது இல்லை. தன் கணவர் உயிருடன் இருந்தவரை லட்சுமி பாட்டி அவருடன் சேர்ந்து வாழவே இல்லை .ஊரில் இருக்கும் தலைமை ஆசிரியர் ஒருவருடன் லட்சுமி பாட்டிக்கு அந்த காலத்தில் தொடர்பு இருந்ததாக பெரிசுகள் அவ்வப்போது பேசி கேட்டதுண்டு .ஆனால் லட்சுமி பாட்டி அவருடன் நேரிடையாக பேசி நாங்கள் பார்த்தது இல்லை.




லட்சுமி பாட்டி இருக்கும் பெரிய வீடும், ஆறு ஏக்கர் நஞ்சை நிலமும் லட்சுமி பாட்டியின்  பெயரில் இருந்தது. வங்கியில்  தன் கையிருப்பில் இருந்த கணிசமான  தொகையில் இருந்து அவ்வப்போது தேவைப்பட்டவர்களுக்கு  அவர் உதவுவதாலேயே அவருக்கும், அவரது மகனுக்கும் அடிக்கடி பெரும் சண்டைகள் நிகழ்ந்தவன்ணமாய் இருந்தது.




ஒருநாள் லட்சுமி பாட்டி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக  ஊரில் செய்தி பரவியதும் ஊரே துக்கத்தில் ஆழ்ந்தது.
லட்சுமி பாட்டி தற்கொலை செய்து கொண்டதை எவராலும் நம்ப முடியவில்லை. சொத்து  பிரச்சனைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பரவலாக பேச்சு அடிபட்டது.லட்சுமி பாட்டியை பார்க்க தலைமை ஆசிரியர் கட்டாயம் வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்கையில் , காவல் துறையினர் வந்து, லட்சுமி பட்டியின் மரணத்தில்  சந்தேகம் இருப்பதாக தங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் பிரேத பரிசோதனைக்காக லட்கிமிபாட்டியின் உடலை கொன்று சென்றனர்.தலைமை ஆசிரியர் தான் அத்தகையதொரு புகாரை தந்திருப்பது தெரிய வந்தது.




லட்சுமி பாட்டியின் மகன்  பார்க்க  வேண்டியவர்களை  பார்த்து, தர வேண்டியதை  தந்ததின் விளைவாக  லட்சுமி பாட்டியின் மரணம் தற்கொலை தான் என்று பிரேத பரிசோதனையில்  முடிவானது , காவல்துறையும் வழக்கை முடித்துக்கொண்டது.பிரேத பரிசோதனைக்கு பிறகு லட்சுமி பாட்டியின் இறுதி  ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் இரு பெரிசுகள் பேசிக்கொண்டிருந்தபோது ,''வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போலவே லட்சுமி பாட்டியின் மரணமும் நிகழ்ந்து விட்டதாக'' பேசிக்கொண்டார்கள், விசாரித்தபோது, தலைமை ஆசிரியருக்கு லட்சுமி பாட்டியுடன் ஏற்பட்ட தொடர்பை கண்டித்து பார்த்த தலைமை  ஆசிரியரின்  மனைவி,இறுதியில் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் , அப்போது அவருடைய குடும்பத்தார் தந்த சாபத்தினால் ,  என்னதான் லட்சுமி பாட்டி நல்லவராக வாழ்ந்த போதும் அவரது இறுதி முடிவு இவ்வாறாக ஆனதாக பேசிக்கொண்டார்கள்.




சுயநலமின்றி, எப்போதும் புன்னகையுடன் மற்றவர்களுக்கு வழிய சென்று உதவும் லட்சுமி பாட்டியின் மரணம் அந்த ஊர் பெண்கள் முகத்தில் பெரும் சோகத்தை இழைத்திருந்தது.





---சே. தரணி  குமார்

LinkWithin

Related Posts with Thumbnails