Friday 30 October 2009

ஊனம்










பெருத்த உடலோடு கால்கள் சூம்பிய நிலையில் முகம் விகாரமாக பார்க்க அச்சம் தரக்கூடிய தோற்றத்தில் இருந்த பாபுவை அவன் தாய் புவனாவுக்கு சற்றும் பிடிப்பது இல்லை. புவனா மிகவும் அழகாக இருப்பவள். சிறு பிராயம் முதல் அவளுக்கு தன் அழகின் மீது அதீத கர்வம் இருந்தது, அந்த கர்வத்தின் வெளிப்பாடு அவளை சுற்றி இருப்பவர்களுக்கு எப்போதும் துன்பம் தருவதாக இருந்தது. அவளுடைய அப்பா புவனாவை தன் சகோதரியின் மகனுக்கு மணமுடித்தபோது அதை  புவனா கொஞ்சம் கூட விரும்பவில்லை. ஆனால் தந்தையின் சொல் மீறி அவளால் எதுவும் செய்ய இயலாமல் போய்விட்டது.

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கருவுற்ற    புவனா , அந்த தாய்மையினால்  சிறிதும்  சந்தோசம் கொள்ளவே இல்லை. அதை  ஒரு சுமையாகவே கருத தொடங்கினாள். அந்த கருவை அழிக்க அவள் எடுத்த எல்லா நடவடிக்கைகளின் விளைவு இன்று பாபுவை நிரந்தர குரூரமாய் , ஊனமாய்  மாற்றி இருந்தது. தன் குழந்தையின் ஊனத்தை பற்றி அவள் சிறிதும் கவலைபட்டவள் அல்லள் . தன் தந்தை இறந்த பிறகு புவனாவின் போக்கு முற்றிலும் மாறி விட்டது. அவள் கணவனை விட்டு வேறு ஒருவருடன் இணக்கமாகி போனாள். இதனால் வெறுத்துப்போன அவள் கணவன் எங்கோ கண்காணாமல் போய்விட்டான் .

பாபுவை சிறு பிராயம் முதல் அவன் பாட்டி கமலா தான் பராமரித்து வந்தாள். பாபு அதிகமாக பசி எடுக்கும்போது மட்டுமே  சிலவகையான சப்தம் எழுப்புவான். அவனுடைய பசியின் சப்தம் பாட்டியை தவிர மற்றவர்களுக்கு நாராசமான ஒலியாகவே கேட்டது. அவனுக்கு உணவு ஊட்டுவது முதல் சுத்தபடுத்துவது வரை கமலா பாட்டியை  தவிர  வேறு  யாரும் பாபுவை  அணுகியதே  இல்லை. அந்த வீடு பெரிய பணக்கார தோரணையோடு இருந்தாலும் அங்கிருப்பவர்களின் மனம் மிக குறுகியதாக இருந்தது. பாட்டியை தவிர மற்றவர்கள்  பாபுவை ஒரு உயிரினமாக கூட கருதவில்லை .

திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் ஒருநாள் கமலா பாட்டிக்கு உயிர் பிரிந்து விட்டது. கமலா பாட்டிக்காக எல்லோரும் அழுதுகொண்டிருந்தனர். சுவற்றின் ஓரமாக உட்கார்ந்து பாட்டியையே  வெறித்து பார்த்து கொண்டிருந்த பாபுவை கண்டு, இனி யார்  அவனை பராமரிக்க போகிறார்களோ என்று  ஊர்மக்கள் மிகவும் கவலை பட்டனர்.அன்று மாலை கமலா பாட்டியின் அடக்கம் முடிந்து போனது. அன்றைய இரவு முதன்முறையாக  புவனா பாபுவுக்கு உணவு ஊட்ட எத்தனித்தபோது  பாபு  பிடிவாதமாக  உணவை ஏற்க மறுத்துவிட்டான் .கால்களால் தவழ்ந்து  அவளிடமிருந்து விலகி தூரமாய் சென்று  அமர்ந்து கொண்டான்.புவனாவுக்கு அவனுடைய செய்கைகள் எரிச்சலூட்டுவதாக இருந்தது. வயிறு காய்ந்து போனால் யார் ஊட்டினாலும் தின்ன தொடங்கி விடுவான் என்ற அலட்சியத்தோடு புவனா சென்று விட்டாள்.  

மறுநாள் காலை பாபுவை வந்து பார்த்த புவனாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  பாபு  உயிரற்ற   சடலமாக  கிடந்தான். பன்னிரண்டு வருடங்கள் தன்னை காத்து வளர்த்த பாட்டியின் பிரிவை தாங்காத   அந்த மனவளர்ச்சியற்ற ஊனமான குழந்தை இனியும் இந்த உலகத்தில் தனக்கென  யாரும் இல்லை என்றெண்ணி  வாழ பிடிக்காமல் தன் பாட்டி போன இடத்திற்கே போய் விட்டது.பாபு பேசுபவனல்ல , அவனால் எந்த உணர்வுகளையும் புரிந்து கொள்ள இயலாது என்று அவனை ஒரு ஜடப்போருளாகவே கருதிய புவனாவுக்கு , அவன் மனமும் , அதன் உணர்வுகளும்  முதன்முறையாக புரிய தொடங்கியது.

பாபு போன்ற எண்ணற்ற குழந்தைகள் ஊனமாக பிறந்ததின் ஒரே காரணமாக பெற்றோர்களின் அரவணைப்பை இழந்து அநாதை ஆக்கப்படுகிறார்கள். இது அவர்கள் வேண்டி வாங்கிய வரம் அன்று. கடவுளின் மறு உருவமாக உணரப்படும் தாய்க்கு பிள்ளைகளின் ஊனம் , அவர்களை வெறுக்கும் காரணியாக அமைவது எத்துணை துரதிஷ்டவசமானது. எந்த சூழ்நிலையானாலும் நாம் பெற்ற பிள்ளைகளை பேணி காப்பது நம்முடைய கடமைதான் என்பது புவனா போன்ற பெண்களுக்கு புரிவதே இல்லை.






--சே.தரணி குமார் 

Wednesday 28 October 2009

சேவை





நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது ஒரு கண்சிகிச்சை முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிக பெரிய அளவில் கூட்டம் வரும் என்பதால் , அதை நடத்துவது குறித்து பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. கல்லூரியின்  என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்களில் விருப்பமானவர்களை கொண்டு ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் அறுபது மாணவர்களும் மாணவிகளும் சேவை செய்ய
முன்வந்தனர்.             

குறிப்பிட்ட தினத்தில் கண்சிகிச்சை முகம் தொடங்கியது. எதிர்பார்த்ததை விட கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது .வயது முதிர்ந்தவர்கள் கண்புரை நீக்கவேண்டி அதிகம் வந்திருந்தனர். வந்திருந்தவர்களில்   
இருநூற்றி முற்பது நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவானது. வந்திருந்தவர்களை ஆறு குழுக்களாக பிரித்து அவர்கள் முகாமை விட்டு போகாதவன்னம் பார்த்துக்கொள்வது மிகுந்த சிரமமாய் இருந்தது. அறுவை சிகிச்சைக்காக தங்கபோகும் விஷயத்தை தங்கள் பிள்ளைகளுக்கு தெரிவிக்க அவர்கள் மிகவும் முனைந்தனர். ஆனால் அப்படி தகவல் தெரிந்தும் ஒரு சிலருக்கு மட்டுமே உறவினர்கள் துணைக்கு வந்தனர். பெரும்பான்மையினருக்கு உதவ யாரும் வரவே இல்லை .


அன்றைய மறுநாள் அனைவருக்கும் அறுவை சிகிச்சை நடந்தேறியது. அடுத்த மூன்று நாட்கள் அவர்கள் அங்கேயே தங்கி தையல் பிரித்தவுடன் வீடு திரும்பலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. முதல் இரண்டு நாட்களுக்குள்ளேயே மாணவர்களில் பாதி பேர் முதியவர்களுக்கு சேவை செய்வதை விரும்பாமல் , அதை சிரமமாக எண்ணி விலகி கொண்டனர். மீதமுள்ள நாங்கள் முப்பது நபர்கள் மட்டும் அடுத்த இரண்டு நாட்கள் இரவு பகலாக சிறிதும் உறக்கம் ஒய்வு இன்றி  அந்த முதியவர்களுக்கு கண் கட்டு பிரிக்கும்வரை  எங்களால் இயன்ற சேவைகளை செய்து கொண்டிருந்தோம். கடைசி நாள் அவர்கள் அவர்கள் கண் கட்டுகள் பிரிக்கப்பட்டு அவர்கள் பார்வை சீரானதும் அவர்களோடு சேர்ந்து எங்களுக்கும் அளவில்லா மகிழ்ச்சி உண்டானது.


இறுதி நாளில் எங்கள் கல்லூரியின் சார்பில் எளிய பிரிவு உபசார விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பேசிய எங்கள் கல்லூரி முதல்வர் எங்களை சுட்டி காட்டி , ''இதோ இங்கிருக்கும் இந்த முப்பது பிள்ளைகளும் உங்கள் உறவுகளுக்கு நிகராக மிக்க கனிவோடு உங்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்திருக்கிறார்கள். இந்த பிள்ளைகளுக்கு என்று தருவதற்கு உங்களிடம் பணமோ , பொருளோ இல்லாமல் இருக்கலாம் ஆனால், இந்த பிள்ளைகள் தங்கள் பிற்கால வாழ்வில் நல்ல வேலையும், குடும்பமும் அமைந்து சிறப்பாக வாழ வேண்டும் என்று மனதார  வாழ்த்தும் மனம் உங்களிடம் இருக்கும் என்று கட்டாயம் நம்புகிறேன்'' என்று கூறியவுடன் அத்துணை பேரும் எழுந்து நின்று எங்களுக்காக கை கூப்பி மனமுருக பிரார்த்தித்தனர். அந்த நிகழ்வு எங்களுக்கு பெரும் சந்தோசத்தையும் மனநிறைவையும் தந்தது. 

இன்று நல்ல வேலை, நல்ல குடும்ப சூழல் என மனநிறைவான வாழ்க்கை  எங்களுக்கு அமைய  எங்கள் படிப்பும் , குடும்பமும்  இன்ன பிற எண்ணற்ற காரணங்களும் இருந்தாலும் , அன்று எங்கள் சேவையின் காரணமாக எங்கள் வாழ்க்கை வளம்பெற வாழ்த்திய அந்த முதியவர்களின் கூட்டு பிரார்த்தனையும்  எங்களின் வளர்ச்சிக்கு  ஒரு மறுக்க முடியாத காரணமாக இருக்கிறது என்பதை என்மனம் ஆழமாக நம்புகிறது.



----சே. தரணிகுமார்
  

Monday 19 October 2009

உயிர்மூச்சு





எழுபது வயதை கடந்த சரஸ்வதி பாட்டிக்கு கண்பார்வை மிகவும் மங்கி போயிருந்தது. காதுகளின் கேட்கும் திறன் மட்டும் குறையாமல் இருந்தது. அவருடைய சொந்த பந்தங்களிலேயே சரஸ்வதி பாட்டி தான் வயதில் மூத்தவர். இறந்து போன மூத்த மகனோடு சேர்த்து  சரஸ்வதி பாட்டிக்கு மூன்று பிள்ளைகள். அனைவருக்கும் திருமணமாகி அவர்கள் பிள்ளைகளுக்கும் பிள்ளைகள் பிறந்திருந்தது. இளைத்த உருவத்துடன் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க கூடியவரான சரஸ்வதி பாட்டி கடந்த நான்கு மாதங்கள் முன்புவரை எல்லோரையும் போல வயல்வேலைகளுக்கு சென்று கொண்டிருந்தவர்தான். அவருக்கு வந்த காய்ச்சல் ஒரு மாதம் நீடித்ததில் மிகவும் வாடிப்போன சரஸ்வதி பாட்டி ,இருமுறை தவறி விழுந்ததில்,கடந்த ஒருமாதமாக படுத்த படுக்கையாகி ,நான்கு நாட்களாக மிகுந்த கவலைக்கிடமாக மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார்.

சரஸ்வதி பாட்டிக்கு முற்றிலும் பேச இயலாமல் போயிருந்தது. கடந்த நான்கு நாட்களாக தன் உறவுகள் எல்லாம் கூடி தன்னுடைய மரணத்தை பற்றி இடையறாது பேசிக்கொண்டிருந்தது சரஸ்வதி பாட்டிக்கு நன்கு கேட்டுக்கொண்டிருந்தது.இது அவருக்கு தாங்க முடியாத மன வேதனையை உண்டாகி இருந்தது. மரணம், எப்போதும் எவருக்கும் எதிர்பார்க்ககூடிய ஒன்றாக இருந்ததில்லை.  மரணம் நேருமே என்ற நினைவே பலருக்கும் பெரும் வேதனையை தரக்கூடியதாக இருக்கிறது.முற்றிலும்  இயலாமல் போய்விட்ட காலத்திலும் கூட  எவருக்கும் துணிந்து மரணத்தை எதிர்கொள்ளும் பக்குவம் அத்துணை சுலபமாய்  வந்து விடுவதில்லை.

திடீரென்று மரணமடையும் ஒருவருக்காக மிகவும் பரிதாபப்படுபவர்கள் , நீண்ட நாட்களாக நோயுற்றிருந்து மரணத்தை எதிர்நோக்கி காத்திருந்து இறந்து போகிறவர்களுக்காக அத்துணை பரிதாபம் கொள்வதே இல்லை .உறவுகளுக்கு  கூட ஒருவித சலிப்பு வந்து விடுகிறது. எல்லாமே பண்டமாற்றாகிபோன வணிக உலகில் மனங்களுக்கு இடையேயான இடைவெளிகள் அதிகரித்து ,உறவுகளை பேணுவதும் அரிதான காரியமாகிவிட்டது.

சரஸ்வதி பாட்டியை பார்க்க வந்திருந்த உறவினர்கள் அவரின் உயிர் பிரிய வேண்டி ஆளுக்கொரு உபாயம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவருக்கு விருப்பமானவர்களை விட்டு வாயில் பாலூற்ற சொல்லிவிட்டு, ஒழுங்கீனமாய் ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவருடைய மார்புகூட்டின் சுவாசம் நின்று போனதா என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்கள்.இதேபோல உயிருக்கு இழுத்துக்கொண்டிருந்த தன் பாட்டிக்கு தங்கத்தை உரசி தண்ணீரோடு புகட்டியபின் உயிர் பிரிந்ததாக , ஒரு உயிரை வதைத்து கொன்ற பாவத்தை சற்றும் உணராதவராக, நான்காவது வீட்டு ஆறுமுகம் சொன்னபோது,அதையும் செயல்படுத்தி பார்த்து விட்டார்கள்.மறுநாளும் உயிர் பிரியாது வாழ எத்தனித்துக்கொண்டிருந்த  சரஸ்வதி பாட்டியை கண்டு அவருடைய மருமகள்கள் முகம் சுளித்து தங்கள் விரக்தியை வெளிக்காட்டினர்.அந்த வீட்டின் குழந்தைகள் மட்டும் உயிர்வதை பட்டுக்கொண்டிருந்த பாட்டியை எட்டத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அன்றைய தினம் கிருத்திகை நட்சத்திரம் என்றும் , உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு அன்றைய தினத்தில் உயிர் பிரிந்துவிடும் என்று ஊரில் பரவலாக பேசிக்கொண்டார்கள்.ஆனால் பாவம் என்ன காரணத்தினாலோ , சரஸ்வதி பாட்டியின் ஜீவனற்ற எலும்புகூடு தேகத்தில் உயிர் எங்கேயோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது.அதற்க்கு அடுத்த நாள் வேறொருவர் தந்த யோசனைப்படி சரஸ்வதி பட்டியின் உயிர் பிரிய வேண்டி , அவரை குளிர்ந்த நீரில் குளிப்பாட்டி சிறிது நேரம் வெயிலில் கிடத்தி இருந்தார்கள்.  சரஸ்வதி பாட்டியின் மனதில் ஒரு அசாத்திய வெறுமை பரவிகிடந்தது. கடந்த இரண்டு நாட்கள் முன்புவரை இறந்து போன தனது கணவரையும் , மூத்த மகனையும் பற்றி சிந்திக்க முடிந்த சரஸ்வதி பாட்டிக்கு இப்போது அதுவும் இயலாததாகிவிட்டது.

மரணம் தன்னை நெருங்காதா என்ற சரஸ்வதி பாட்டியின் ஏக்கம் , அவர் மரணத்திற்காக எதிர்பார்த்திருக்கும் உறவுகளின் ஏக்கத்தை விட சற்று அதிகமானதாக இருந்தது.பாட்டியின் மரணத்திற்காக மேற்கொள்ளப்பட பலவித முயற்சிகளும் பலிதமாகாமல் போனதால் உறவுகள் சலித்து கொள்ள  தொடங்கி இருந்தது.வெளியூரில் இருந்து வந்திருந்தவர்கள் அவரவர் வேலையை பார்க்க நாளை ஊர் திரும்பலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருந்த அந்த இரவில் தேய்பிறை நிலவு  மங்கிய வெளிச்சத்தோடு மேகங்களின் ஊடே மறைந்து கொண்டிருந்தது. எங்கும் இருள் கவிழ்ந்த அந்த நடு நிசியில் யாருமற்ற தனிமையில் கிடத்தப்பட்டிருந்த சரஸ்வதி பாட்டிக்கு இரண்டு முறை பெரிய விக்கல் வந்தது.தண்ணீருக்காக அவர்  மனம் ஏங்கியது . மூன்றாவது விக்கல் வர எத்தனித்தபோது சப்தமின்றி சரஸ்வதி பாட்டியின் உயிர்மூச்சு அடங்கி போனது.

மறுநாள் காலையில் கோழிகளை விரட்டிக்கொண்டு வந்த அந்த வீட்டு குழந்தைகள் சரஸ்வதி பாட்டியை எறும்புகள் மொய்திருப்பதை கண்டு சொன்னபிறகே உறவுகளுக்கு சரஸ்வதி பாட்டி இறந்து போனது தெரிய வந்தது. அதுவரை இறந்துபோக மாட்டாரா என்று எண்ணற்ற வழிகளை யோசித்தவர்கள் , ஒரு பொய்யான அழுகுரலோடு அவரின் மரணத்திற்கு துக்கம்  அனுஷ்ட்டிக்க தொடங்கினர்.            

வயது முதிர்ந்து,  நோயுற்று ,மரணத்தை தழுவும் எல்லோருக்கும் இறுதி வரை தன்னுடைய உறவுகளின் அன்பான கவனிப்பு கிடைத்து விடுவதில்லை. அவர்களின்  மரணம்  உறவுகளால் மிகவும் எதிர்பார்க்கபடுகிற நிகழ்வாக  அமைந்து விடுகிறது.மரணமுறுகிறவர்களின் மனதின்   வலிகளை நெருங்கிய உறவுகள் கூட உதாசீனப்படுத்தி விடுகின்றன.யாருமற்ற இரவில் தனிமையில் நடந்து போகும் குழந்தையின் மனோ நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். இயலாமையுடன் அவர்கள் விடும் மூச்சு காற்றின் சப்தம் அவர்களுக்கே மிக கொடூரமாய் கேட்க தொடங்கி விடுகிறது.மரணத்தை இருகரம் கூப்பி அவர்கள் அழைத்து கொண்டே இருந்தாலும் , அது அவர்களுக்கு ஒளிந்து கண்ணாமூச்சி  விளையாடும் குழந்தையாய் அவர்கள் முன்பு கண் சிமிட்டி சிரித்துக்கொண்டிருக்கிறது.


--சே. தரணி குமார்

Saturday 17 October 2009

சைக்கிள்









நாங்கள் வசித்த அந்த அரசு அலுவலர் குடியிருப்பு எப்போதும் அசாத்திய சூழ்நிலையுடன் மிகவும் ரம்மியமாக இருக்கும்.அங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் உயர்தட்டு அரசு  அலுவலர்களாக இருந்ததினால் அங்கு எந்த பிரச்னையும் எப்போதும் வந்ததில்லை.அந்த குடியிருப்பு பகுதியில் பல்வேறு நண்பர்கள் வட்டங்கள் இருந்தாலும் எங்கள் நல்லபண்புகளால்    அந்த குடியிருப்பினர் எங்கள் நட்பு வட்டத்தை பற்றி உயர்வாக     பேசிக்கொண்டார்கள்.எங்கள் குடியிருப்பு பகுதியை ஒட்டி ஒரு பஞ்சாலையின் குடியிருப்பு ஒன்று இருந்தது.அதன் அருகில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் நாங்கள் கிரிக்கெட் விளையாடும் போது  அந்த குடியிருப்பு பகுதியில் இருந்து வந்த மோகன் எங்களுடன் பழகலானான் . பின்னர் அவனுடைய ஒத்த பண்புகளாலும் , நல்ல இயல்புகளாலும் மிக விரைவிலேயே எங்கள் நட்பு வட்டத்தில் நெருங்கிய நண்பனாக மாறிவிட்டான்.

மோகன் குடும்பம் மிக ஏழ்மையானது .அவனுடைய அப்பா  பஞ்சாலையில் நிரந்தரமில்லாத தினக்கூலி வேலை செய்து வந்தார்.குடும்ப சூழ்நிலையால் மோகன் எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க இயலவில்லை. அவன் ஒரு மின் இணைப்பு வேலை செய்பவரிடம் உதவியாளனாக வேலைக்கு சேர்ந்து ,மூன்று வருடங்களில் சொந்தமாக சிறு மின் வேலைகளை எடுத்து செய்து வரலானான் .எங்கள் நட்பு வட்டத்தில் அனைவரிடத்தும் இரு சக்கர வாகங்கள் இருந்த போதிலும் ,நாங்கள் பலமுறை வற்புறுத்தியபோதும் மோகன் ஒருபோதும் எங்கள் வாகனங்களை வாங்கி சென்றதே இல்லை.அவனுக்கு என்று சொந்தமாக ஒரு சைக்கிள் கூட அவனிடம் இருந்ததில்லை. தொலைதூர வேலை என்றால் வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு   சென்று விடுவான்.












நீண்ட காலமாக மோகனுக்கு  சுயமாக ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.அதை பற்றிஅவன் நிறைய கனவுகள் கொண்டிருந்தான்.எங்களிடம்     அதனை  எப்போதும்    சொல்லிக்கொண்டே இருப்பான். தன்        உழைப்பில்  வீட்டு   செலவுகளுக்கு தந்தது போக மீதம் இருக்கும் பணத்தை மிக சிரமப்பட்டு சைக்கிள் வாங்க வேண்டி சேமித்து வைத்து கொண்டிருந்தான். நாங்கள் பலமுறை அவனுக்கு சைக்கிள்   வாங்க பண உதவி செய்ய முற்பட்டோதும் , சுயமான  உழைப்பினாலேயே  தன்னுடைய      லட்சியத்தை அடைய நினைப்பதாக இனிமையாக கூறி எங்கள் பண உதவிகளை மறுத்து விடுவான் .










ஒருமுறை,நண்பனுடைய அண்ணனின் திருமணத்திற்காக நாங்கள் அனைவரும் பக்கத்து ஊருக்கு சென்றிருந்தோம் .இரவு நெடுநேரம் வரை  நாங்கள்  அனைவரும் தூங்காமல்பேசிக்கொண்டிருந்தோம்.மோகன் மிக  இனிமையாக  பாடக்கூடியவன் .                 அன்றைய     தினம் மோகன் மிக இனிமையான பாடல்களாக பாடி மிகவும் உற்சாகமாய் இருந்தான்.காரணம் கேட்டபோது தான் வேலை செய்து கொண்டிருக்கும் வீட்டின் மின் இணைப்பு வேலைகள் நாளையுடன் முடிவடைவதாகவும் ,அவர்கள் தரப்போகும் மீத பணம் கொண்டு தன்னுடைய நீண்ட நாள்  கனவான சைக்கிளை  வாங்க  போவதாகவும், அந்த தருணத்தில் நாங்கள் அவனுடன் இருக்க வேண்டுமென்றும் அவன் கேட்டுக்கொண்டதை எங்களால் மறுக்க முடியவில்லை.அவன் சைக்கிள் வாங்க போவது அவனுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்  மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியது.

மறுநாள் திருமணம் முடிந்து நாங்கள் அன்றைய தினம் வெளியான ஒரு புது திரைப்படத்திற்கு செல்வதென்று முடிவானது. எவ்வளவோ வற்புறுத்தியும் மோகன் வேலையை காரணம் காட்டி எங்களுடன் வர மறுத்துவிட்டான். மாலையில்  அவன் சைக்கிள் வாங்க செல்லும்போது எல்லோரும் சேர்ந்து செல்வதென முடிவு செய்துக்கொண்டு மோகனை தவிர்த்து நாங்கள் மட்டும் திரைப்படத்திற்கு சென்று விட்டோம். திரைப்படம் முடிந்து திரும்பிக்கொண்டிருந்த எங்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.மின்சார இணைப்பு கொடுக்க போன இடத்தில , துரதிர்ஷ்டவசமாக மின்சாரத்தில் சிக்கி மோகன் உயரிழந்து விட்டிருந்தான். காலைவரை எங்களுடன் இனிமையாக பேசிக்கொண்டிருந்த எங்கள் நண்பனை உயிரற்ற சடலமாக பார்த்தபோது எங்களால் அதை சற்றும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

எங்களின் நெஞ்சில் நிறைந்த இனிய நண்பன் ,எங்களின் தோள்கள் மீது பயணித்து தன்னுடைய இறுதி ஊர்வலத்தை முடித்துக்கொண்டு மீளா துயிலில் ஆழ்ந்துவிட்டான். அந்த ஏழை குடும்பத்து தன்மான இளைஞனது சைக்கிள் கனவு பகல் கனவாக நிறைவேறாமலேயே போய்விட்டது. இப்போது நாங்கள் அனைவரும் படித்து முடித்து நல்ல வேலையில் நிறைவாக இருந்தபோதும்,வசதியான கார்களில் பவணி வந்தபோதும் எங்கேயாவது புது சைக்கிள் கடைகளில் விற்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள்களை பார்க்கும் போது மோகனின் நினைவுகளால் மனது கணமாகிவிடுகிறது.






----சே.தரணி குமார்

Thursday 15 October 2009

வாழ்க்கை







சடங்கு சம்பிரதாயம் என்று கடந்த பதினைந்து நாட்களாக நடத்தப்பட்ட எல்லா  நிகழ்ச்சிகளிலும்  ஒரு காட்சி பொருளாக மட்டுமே  நடமாடிய பவித்ராவுக்கு வாழ்க்கையே மிக இருண்டு போனதாக தோன்றியது. நகருமில்லாத கிராமமும் இல்லாத அந்த ரெண்டும் கெட்டான் ஊரில் பவித்ராவின் கணவன் ரவி தற்கொலை செய்துகொண்டு இறந்து போன பிறகு, கடந்த பதினைந்து நாட்களாக பவித்ராவுக்கு ஏராளமான சடங்குகள் நடத்தப்பட்டு நேற்றோடு அவளுடைய பூவும் பொட்டும்  நிரந்தரமாக அவளிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.


 மூன்றாம் வகுப்பும், ஒன்றாம் வகுப்பும் படிக்கும் தன் இரண்டு பெண்குழந்தைகளோடு இந்த உலகில் எப்படி காலம் தள்ளபோகிறோம் என்ற கேள்வி அவள் முன்னாள் பூதாகரமாய் நின்று அவளை மிரட்டியது.பவித்ராவும், ரவியும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டவர்கள் ,கடந்த வருடம் முன்பு வரை மிக இனிமையாக சென்று கொண்டிருந்த அவர்கள் இல்லறத்தில் சமீபத்தில் தான் வீணான சச்சரவுகள் தோன்ற ஆரம்பித்தன.ரவி காதல் திருமணம் செய்துகொண்டது அவனது வீட்டாருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியதால் உறவுகள் மிகவும் சீர்கெட்டு போனது.இந்த திருமணம் பவித்ராவின் வீட்டிலும் கோபத்தை ஏற்படுத்தினாலும் அவர்கள் மட்டும்  அவளை மன்னித்து ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.




ரவியின் வீட்டு நிலவரம் முற்றிலும் மாறாக இருந்தது. இரண்டு குழந்தைகள் பிறந்தபிறகும் அவர்களின் கோபம் தனியவே இல்லை ,இறுதியாக கடந்தவருடம் ரவியின் அப்பா தன்னுடைய சொத்துக்களை பிரிக்கும்போது மீதம் இருக்கும் இரு மகன்களுக்கு மட்டுமே சேரும்படி எழுதிவிட்டது ரவியின் மனதில் பெருத்த தாக்கத்தை உண்டாக்கிவிட்டது. இதனால் அவன் தன்னுடைய குடும்ப உறவுகளை முற்றிலும் அறுத்துக்கொண்டான் .பவித்ரா மட்டும் தன்னுடைய உறவுகளோடு புழங்குவது அவனுள் எரிச்சலையும் பொறாமையையும் ஏற்படுத்தியது இது நாளாவட்டத்தில் ரவியின் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை புகுத்தி  விட்டது.இதனை பவித்ராவிடம் வெளிப்படையாக பேசாமல் வேறு  வேறு காரணங்களுக்காக சண்டை பிடிக்க ஆரம்பித்தான்.



தன்னுடைய அன்பான கணவன் ,இப்படி வீணாக சண்டையிடுவதின் காரணங்களை ஆராயாமல், அவனுடைய மன உணர்வுகளை புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லாமல் , அவளும் ரவியுடன் வாக்குவாதம் செய்ததுடன் தேவையற்று , கணவன் மனைவி பிரச்சனையை தன்னுடைய வீடு வரை எடுத்து சென்றுவிட்டாள் . இதனால் இன்னும் வெறுப்புற்ற ரவியின் போக்கு முற்றிலுமாக மாறதொடங்கியது



இவர்களுடைய இந்த பிரச்சனைகளால் குழந்தைகளின் இயல்பான சந்தோஷங்கள்  யாவும் முற்றிலும் அழிந்துபோனது.அவர்களுடைய படிப்பும் மந்தமானது.எப்போது அப்பாவும் அம்மாவும் சண்டையிட்டு கொள்வார்களோ என்ற பயத்துடன் அந்த பிஞ்சுகள் அஞ்ச தொடங்கின. குழந்தைகளை பற்றி கவலைப்படாமல் ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுக்கும் மனோபாவம் இன்றி , தாங்கள் காதலித்து திருமணம் புரிந்தவர்கள் என்பதை முற்றிலும் மறந்து , இருவரும் நிரந்தர எதிரிகள் போல தங்களின் சண்டைகளை தொடர்ந்துகொண்டிருந்தனர்.



கடந்த இருபத்து நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரிய பிரச்சனையில்,பவித்ரா குழந்தைகளை அழைத்துக்கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்றுவிட , நான்கு நாட்களுக்கும் மேலாக பொறுத்து பார்த்த ரவி,பவித்ரா திரும்ப வராததால் ,தன்னுடைய பிரச்சனைகளை பேசி தீர்த்து கொள்ளும் பக்குவம் இன்றி,தன்னை நம்பி இந்த உலகில் மூன்று பெண்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து,சுயநலத்தின் உச்சகட்டமான தற்கொலையை தேர்ந்து எடுத்துக்கொண்டான்.

ரவியின் மரணம் பவித்ராவின் மனதில் கிழைத்து,  தழைத்து பெருமரமாக வேரூன்றி இருந்த வீம்பையும் வீராப்பையும் அடியோடு புரட்டி போட்டுவிட்டது.கணவனுடன் பேசி பிரச்சனையை தீர்த்துகொள்ளாமல், இப்படி தான் நடந்து கொண்டதனாலேயே ரவி இப்படி மனம் வெறுத்து இத்தகைய முடிவை எடுதுக்கொண்டுவிட்டானே என்ற குற்ற உணர்வு அவளை சித்ரவதைக்குள்ளாக்கியது



கணவனை இழந்த இளம் பெண்கள் என்னதான் ஒழுக்கமாக வாழ்ந்தாலும் அவர்களை கேலிக்கும் கிண்டலுக்கும் உரிய கருப்பொருட்களாக மாற்றி அவர்களின் அன்றாட நிகழ்வுகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் இந்த சமூகம் கற்பிப்பதை பவித்ரா நன்கு அறிவாள்.வயது வித்தியாசமின்றி வக்கிர பார்வைகளோடு அலையும் ஒரு சில ஆண்களால் கணவனை இழந்த பெண்களுக்கு அதே ஊரில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும் பவித்ராவுக்கு தெரியும்.தன் உள்ளத்து குமுறல்களை எல்லாம், தன்னுடைய கண்களின் கண்ணீர் தீரும்வரை தன் தாயின் மடியில் படுத்து  அடிக்கடி கொட்டி தீர்த்து கொண்டாள்.



சிறிது காலம் கழித்து தொலை தூர ஊரில் முதியோர் இல்லமும் சிறார் பள்ளியும் இணைந்த காப்பகத்தில் பவித்ரா அலுவலக வேலையில் சேர்ந்து விட்டாள். தன் வேலை நேரம் போக மீதம் இருக்கும் நேரங்களில் அங்கு இருக்கும் வயதான முதியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறாள் .பவித்ரா தன் இரு குழந்தைகளோடு காப்பக குடியிருப்பிலே தங்கி இருக்கிறாள் . பவித்ராவின் குழந்தைகள் இப்போது நன்கு படிக்கிறார்கள் . பவித்ரா தன் குழந்தைகளுக்கு குடும்பத்தையும் , சமூகத்தையும் அனுசரித்து வாழ்வதை மிக அழகாக பயிற்று வருகிறாள் .தன்னை போலன்றி தன் குழந்தைகள் எந்த சூழ்நிலையிலும் சரியான முடிவு எடுப்பவர்களாக இருப்பவர்களாக வளர்வது கண்டு பவித்ரா மிகுந்த மனநிறைவோடு இருக்கிறாள் .

                                                    

                                                    

                         
                              
                    

 விட்டுகொடுப்பவர்கள் கெட்டுபோவதில்லை .

          கெட்டுபோகிறவர்கள் விட்டுகொடுப்பதில்லை .



--சே.தரணி குமார்.

.

Wednesday 14 October 2009

லட்சுமி பாட்டி



அந்த சிறிய கிராமத்தில் லட்சுமி பாட்டியை பற்றி தெரியாதவர்கள் நிச்சயம் யாரும் இருக்கவே முடியாது.அந்த ஊரில் எங்கு குழந்தை பிறப்பு என்றாலும் , எங்கு பூப்பெய்தல் நடந்தாலும் , கல்யாண வீடானாலும், இழவு வீடானாலும், லட்சுமி பாட்டியை முதல் ஆளாக அங்கு கட்டாயம் எதிர்பார்க்கலாம் .  ஊரின் நிகழ்வுகளை     தன் சொந்த வீட்டின் நிகழ்வினை போல எண்ணுவதோடு இயன்ற அளவிற்கு உதவும் உள்ளம் படைத்தவர்.




லட்சுமி பட்டிக்கு இரண்டு மகன்கள் .மூத்த மகன் வெளி நாட்டிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டதால் லட்சுமி பாட்டி தன்னுடைய இரண்டாவது மகனுடனேயே இருக்கும்படி ஆகிவிட்டது. லட்சுமி பாட்டியின் பரோபகார குணம் அவரது மகனுக்கு கொஞ்சமும் பிடிப்பது இல்லை. தன் கணவர் உயிருடன் இருந்தவரை லட்சுமி பாட்டி அவருடன் சேர்ந்து வாழவே இல்லை .ஊரில் இருக்கும் தலைமை ஆசிரியர் ஒருவருடன் லட்சுமி பாட்டிக்கு அந்த காலத்தில் தொடர்பு இருந்ததாக பெரிசுகள் அவ்வப்போது பேசி கேட்டதுண்டு .ஆனால் லட்சுமி பாட்டி அவருடன் நேரிடையாக பேசி நாங்கள் பார்த்தது இல்லை.




லட்சுமி பாட்டி இருக்கும் பெரிய வீடும், ஆறு ஏக்கர் நஞ்சை நிலமும் லட்சுமி பாட்டியின்  பெயரில் இருந்தது. வங்கியில்  தன் கையிருப்பில் இருந்த கணிசமான  தொகையில் இருந்து அவ்வப்போது தேவைப்பட்டவர்களுக்கு  அவர் உதவுவதாலேயே அவருக்கும், அவரது மகனுக்கும் அடிக்கடி பெரும் சண்டைகள் நிகழ்ந்தவன்ணமாய் இருந்தது.




ஒருநாள் லட்சுமி பாட்டி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக  ஊரில் செய்தி பரவியதும் ஊரே துக்கத்தில் ஆழ்ந்தது.
லட்சுமி பாட்டி தற்கொலை செய்து கொண்டதை எவராலும் நம்ப முடியவில்லை. சொத்து  பிரச்சனைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பரவலாக பேச்சு அடிபட்டது.லட்சுமி பாட்டியை பார்க்க தலைமை ஆசிரியர் கட்டாயம் வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்கையில் , காவல் துறையினர் வந்து, லட்சுமி பட்டியின் மரணத்தில்  சந்தேகம் இருப்பதாக தங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் பிரேத பரிசோதனைக்காக லட்கிமிபாட்டியின் உடலை கொன்று சென்றனர்.தலைமை ஆசிரியர் தான் அத்தகையதொரு புகாரை தந்திருப்பது தெரிய வந்தது.




லட்சுமி பாட்டியின் மகன்  பார்க்க  வேண்டியவர்களை  பார்த்து, தர வேண்டியதை  தந்ததின் விளைவாக  லட்சுமி பாட்டியின் மரணம் தற்கொலை தான் என்று பிரேத பரிசோதனையில்  முடிவானது , காவல்துறையும் வழக்கை முடித்துக்கொண்டது.பிரேத பரிசோதனைக்கு பிறகு லட்சுமி பாட்டியின் இறுதி  ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் இரு பெரிசுகள் பேசிக்கொண்டிருந்தபோது ,''வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போலவே லட்சுமி பாட்டியின் மரணமும் நிகழ்ந்து விட்டதாக'' பேசிக்கொண்டார்கள், விசாரித்தபோது, தலைமை ஆசிரியருக்கு லட்சுமி பாட்டியுடன் ஏற்பட்ட தொடர்பை கண்டித்து பார்த்த தலைமை  ஆசிரியரின்  மனைவி,இறுதியில் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் , அப்போது அவருடைய குடும்பத்தார் தந்த சாபத்தினால் ,  என்னதான் லட்சுமி பாட்டி நல்லவராக வாழ்ந்த போதும் அவரது இறுதி முடிவு இவ்வாறாக ஆனதாக பேசிக்கொண்டார்கள்.




சுயநலமின்றி, எப்போதும் புன்னகையுடன் மற்றவர்களுக்கு வழிய சென்று உதவும் லட்சுமி பாட்டியின் மரணம் அந்த ஊர் பெண்கள் முகத்தில் பெரும் சோகத்தை இழைத்திருந்தது.





---சே. தரணி  குமார்

Tuesday 13 October 2009

மனமாற்றம்



எப்போதும் சிரித்த முகத்துடன் இனிமையாக பழகும் குமார் ஆசிரியர் கணித வகுப்புகளை இனிமையாக நடத்த கூடியவர் .மாணவர்களின் பிரியத்திற்கு உரியவராகவும் ,மனித நேயம் மிக்கவராகவும் இருந்த குமார் ஆசிரியர் டியூஷன் வகுப்புகள் நடத்தினாலும் ,சிரமமான சூழ்நிலையில் உள்ள மாணவர்களிடம் அவர்கள் சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்வதோடு, அவரால் முடிந்த உதவிகளையும் செய்வதினால் மாணவர்கள் மத்தியில் அவருக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது.







எப்போதும் கலகலப்புடன் வகுப்புக்கு வரும் குமார் ஆசிரியர் அன்று மிகவும் இறுக்கமாக இருந்தது அனைவருக்கும் ஆச்சர்யம் தந்தது.வகுப்பறைக்குள் வந்ததும் நேராக கீதாவின்  இருக்கை அருகே சென்ற குமார் ஆசிரியர் ,கீதாவிடம் ''கீதா நீ என்னை பற்றி சுந்தரம் டியூஷன் சென்டெரில்   என்ன பேசினாய் ? என்னை பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது இதே முதலும் கடைசியுமாய் இருக்கட்டும்'' என்று எச்சிரிக்கை தொனிக்க சொல்லிவிட்டு , அன்றைக்கான கணித வகுப்புகளை நடத்த துவங்கினார் . ஆனால் நடந்த நிகழ்வால் பாடத்தில்    யாருக்கும் மனம் பதியவே இல்லை.





கீதா மிகவும் துடுக்கான பெண் .அவளின் அப்பா தாசில்தாரராக இருப்பதால் கீதாவுக்கு முரட்டு துணிச்சல் சற்று அதிகமாகவே இருந்தது .பனிரெண்டாம் வகுப்பு வருவதற்குள்ளாக ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்களிடம் ஏற்பட்ட மோதல்களால் இதுவரை ஐந்து பள்ளிகளுக்கு மேல் மாறியவள் . அவளுடைய அப்பா தந்த அளவுக்கு அதிகமான செல்லத்தினால்,  கீதாவின் இயல்புகள் எல்லாம் திரிந்து , அவளிடம்  ,எவரையும் மதிக்காத  அலட்சிய போக்கே அதிகம் நிறைந்து  இருந்தது.





இந்த புது பள்ளியில் சேர்ந்ததும் முதலில் குமார் ஆசிரியரிடம் கணித டியூஷன் வந்துகொண்டிருந்த கீதா , தன்னை  தாசில்தாரர் மகள் என்ற அந்தஸ்தோடு நடத்தாமல் எல்லோருடனும் சரிசமமாக     நடத்துவதும் , தாமதமாக வரும்போது எல்லாம் மற்றவர்களின் முன்னாள் ஆசிரியர்  கடிந்து கொள்வதும் சற்றும் பிடிக்காததால் , வெறுப்புற்று அவளாகவே அதே ஊரில் சுந்தரம் ஆசிரியர் நடத்தி கொண்டிருந்த டியூஷன் க்கு மாறி கொண்டாள் . அங்கு தினமும் அவள் குமார் ஆசிரியரை பற்றி அவதூறாக பேசுவதும் , அவருக்கு சுந்தரம் ஆசிரியரின் அளவுக்கு கணிதத்துவம் இல்லை என்று குறை கூறுவதும் , குமார் ஆசிரியரின் காதுகளுக்கு எட்டியதே , குமார் ஆசிரியர் ,இவ்வாறு வகுப்பறையில் கீதாவை எச்சரிக்க காரணாமாய் அமைந்தது.







உடனே வீட்டிற்கு சென்ற கீதா தன அப்பாவிடம் நடந்தவற்றை தனக்கு சாதகமாக மாற்றி கூறி , குமார் ஆசிரியர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி , மிரட்டியதாக கூறியதை , மகள் மீது கொண்ட பாசத்தினால் ,என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க  முடிந்தும் , தாசில்தார் மகளின் வேண்டுகோளுக்கு இணங்க  தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி , கல்வித்துறை உயரதிகாரிகளிடம் பேசி அன்றே குமார் ஆசிரியரை வேறு வகுப்புகளுக்கு மாற்றும்படி செய்து விட்டார் .





மறுநாள் வகுப்புகளுக்கு வந்த மாணவர்களுக்கு கணித வகுப்புக்கு குமார் ஆசிரியர் வராமல் வேறு ஆசிரியர் வந்தது அதிர்ச்சியை தந்தது .புது ஆசிரியருக்கோ மாணவர்கள் குமார் ஆசிரியரிடம் கொண்டிருந்த   மரியாதையும், தனக்கு  ஒத்துழைப்பு தராததும் அவருக்கு அந்த வகுப்பு  மாணவர்கள் மீது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது.பின்னர்  பள்ளி தலைமை ஆசிரியரை அணுகிய மாணவர்கள் பாதி பாடங்கள் எடுக்கப்பட்ட நிலையில் வேறு ஆசிரியர் மாற்றுவது சரியல்ல என்றும் குமார் ஆசிரியரே தங்களுக்கு மீண்டும் கணித வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று மன்றாடி கேட்டு கொண்டனர்.





தலைமை  ஆசிரியர் நிலைமையை உயரதிகாரிகளுக்கு தெரிவித்ததால்  மறுநாள் உயரதிகாரிகளின் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.மாணவர்கள் அனைவரும் குமார் ஆசிரியர் தவறாக பேசவில்லை , அவர் குற்றமற்றவற்றவர் என்று எவ்வளவோ கூறியும், அதிகார வர்கத்தின் குறுக்குவழி சிபாரிசுகளுக்கு முன்னாள் உண்மை எடுபடாமல் போனது.குமார் ஆசிரியருக்கு இந்த சம்பவத்தால்  மிகுந்த அவமானமாகிவிட்டது. அவர் உடனடியாக பணி மாற்றம் பெற்றுக்கொண்டு வேறு ஊருக்கு மாற்றாலாகிவிட்டார்.மாணவர்கள் செய்வதறியாது திகைத்தனர். அவர்களால் இந்த நிகழ்வுக்கு காரணமான கீதாவை சற்றும் மன்னிக்க  முடியவில்லை .வகுப்பிலும் , வெளியிலும் கீதாவிடம் பேசுவதை ஒட்டுமொத்த மாணவர்களும் மாணவிகளும் அறவே தவிர்த்தனர்.




மாணவர்களும் மாணவிகளும் அந்த வருடம் முழுமையும் கீதாவுடன் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளவே இல்லை. ஆசிரியரை மாற்ற செய்தால் வுகுப்பு நண்பர்கள்  தன்னை உயர்வாக நினைப்பார்கள் என்று எண்ணிய கீதாவுக்கு, வகுப்பினரின் ஒட்டுமொத்த புறக்கணிப்பு மிக்க வேதனையை தந்தது.இது நாளாவட்டத்தில் அவளுக்குள் மிகப்பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தியது .ஆனால் அவள் திருந்திய போதும் அவளை ஏற்றுக்கொள்ள நண்பர்கள் தயாராக இல்லை.




எப்போதும் நிறைய மாணவர்கள் நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெரும் அந்த பள்ளியின் அந்த வருடத்திய தேர்ச்சி விகிதமும், மதிப்பெண் விகிதமும் சற்று குறைவாகவே அமைந்தது. மாணவர்களுக்கு மனதளவில் ஆசிரியரின் மாற்றம் ஒரு சோர்வை ஏற்படுத்தியதே இதற்க்கு காரணமாக பேசப்பட்டது .




ஒரு சிலர் அதிகார துஷ்பிரயோகம் செய்யும்போது அவர்கள் தண்டிக்க நினைப்பவர்களோடு சேர்த்து ,இதனை சார்ந்துள்ள சூழலில் உள்ளவர்களும் பாதிப்புக்கு ஆளாக்கபடுகிறார்கள் என்பதை இனியாவது அதிகாரங்களில் உள்ளவர்கள் தயவு செய்து கட்டாயம் உணரவேண்டும்.




--சே.தரணி குமார்.

Monday 12 October 2009

நாட்டு நடப்பு





எண்ணிக்கொண்டிருந்த வரதட்சணை
தொகை குறைவாக இருந்ததால்
கல்யாணத்தை நிறுத்திய சம்பந்தி வீட்டார்
இப்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் .



போனஸ் பிரச்சனை பற்றி
நீண்ட நெடிய விவாதத்திற்கு பிறகு
சுமூக தீர்வு ஏற்பட்டது
சங்க தலைவருக்கு மட்டும்--- தனியாக




தமிழக வாக்காளர்களின்
தற்போதிய விலை நிலவரம்
தலைக்கு ஒரு லட்சம் காசுகள் .





தங்களை விலை மாதராய்
சித்தரித்ததை  எதிர்த்து
நீதி கேட்டு மேடையில் முழங்கிய
நடிகையின் மனதில் ஏகமாய் பதற்றம்
எட்டு மணிக்குள்  மந்திரியின்
அந்தரங்க  பங்களாவுக்கு
போயாக வேண்டுமே என்று...



 
இலவசம் ஏதும் அறிவிக்கப்படாத
தேர்தல் நடப்பதாக  கனவு கண்ட
அப்பாவியான நேர்மையான வாக்காளன் .


- சே. தரணி குமார்.             

Sunday 11 October 2009

நர்மதா


நர்மதா ஏழ்மை குடும்பத்தில் பிறந்த, நல்ல குணமும்,அழகும் நிறைந்த பெண் .ஏழ்மை குடும்பத்தில் இருந்து படிக்க வந்திருந்தாலும் நர்மதாவின் நேர்மையும் , நல்ல இயல்புகளும் அனைவருக்கும் அவள் மீது மிகுந்த மதிப்பு வைக்க காரணிகளாக இருந்தது. தினமும் பள்ளி செல்வதற்கு முன்பு மாலை கட்டுவதற்கு தேவையான இலைகளை பூக்கடைகாரர்களிடம் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் சிறு வருமானத்தை கொண்டு தன் தம்பிகளுக்கும் தங்கைக்கும் தேவையானவற்றை வாங்கி தருவது நர்மதாவின் வழக்கம். பன்னிரெண்டாம் வகுப்பிற்காக அனைவரும் பக்கத்துக்கு டவுனில் உள்ள ட்யூஷனுக்கு பேருந்தில் சென்று வந்த போது பணமின்மை காரணமாக நர்மதா மட்டும் நடை பயணமாகவே சென்று வருவாள் .






நர்மதாவின் அப்பா கணேசன் சாதாரண மில் தொழிலாளி . அவளின் அம்மா காமாட்சி மன நலம் பாதிக்கப்பட்டவர் . கணேசன் மிகவும் குடிகாரராக ,குடும்பத்தை கவனிக்காதவராக இருந்ததால் நர்மதாவுக்கு ஏற்பட்ட சிரமங்கள் அளவிட முடியாதவை .இரண்டு தம்பிகளையும், ஒரு தங்கையையும், தன் தாயும் சேர்த்து நான்கு பேரையும்  நர்மதாவே ஒரு தாயை போல கவனித்து  வந்தாள் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டதை பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாதவராக , அதற்கான எந்த மருத்துவமும் பார்க்காமல் தனக்கு வேண்டும் சமயங்களில் எல்லாம் காமாட்சியை அடித்து துன்புறுத்தி இன்பம் துய்க்கும் , இரக்கமற்ற மனநிலையில் கணேசன் இருந்தது நர்மதாவிற்கு ஆற்றொணா துயரத்தை தந்தது.








குடித்து விட்டு வேலைக்கு சென்றதால் கணேசனின் மில் வேலை பறிபோனது. பின்னர் சிற்சில சொற்ப வேலைகள் மூலம் கணேசன் ஈட்டும் வருமானம் அவருக்கு குடிப்பதற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.இதனால் படிப்பை தொடர முடியாத நர்மதா கிடைத்த வேலைக்கு சென்று குடும்ப பாரத்தை சுமக்க தொடங்கினாள்.  அடுத்த இரண்டு ஆண்டுகள் நர்மதாவிற்கு சிரமம் நிறைந்ததாக அமைந்தது . குடும்பம் நடத்த மகள் படும் சிரமம் பற்றி அக்கறை கொள்ளாத கணேசன்,வீட்டில் பருவம் எய்திய மகள் இருக்கும் பிரதிக்ஞை கொஞ்சமும் இன்றி மனநிலை பாதிக்கப்பட்ட மனைவியை குடித்து விட்டு வந்து காமத்திற்காக அடித்து துன்புறுத்தும் அவலங்கள் நிதம் நடந்தேற துவங்கின .மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்ட காமாட்சி கணேசனை கண்டதும் அஞ்சி நடுங்கி நர்மதாவின் பின்னே ஒளிவது நர்மதாவிற்கு தாங்க முடியாத வேதனையை தந்தது. நர்மதாவிற்கு தெய்வங்கள் மீதான நம்பிக்கைகள் முற்றிலும் அற்று போனது.தன்னனை நம்பி வாழும் நான்கு ஜீவன்களுக்காக வாழ்ந்தாகவேண்டிய சூழலானது.




ஒருநாள் காமாட்சிக்கு உடல் நலமில்லாததால் வேலைக்கு போவதா வேண்டாமா என்று நர்மதா யோசித்துகொண்டிருந்த போது வழக்கம் போல குடித்து விட்டு வீட்டிற்கு வந்த கணேசனை கண்டதும் சரி இவர் பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கையில் வேலைக்கு போய்விட்டாள்.பின்னர் வேலை செய்யும் இடத்தில நிலைமையை சொல்லி விட்டு சற்று நேரத்தில் எல்லாம் வீடு திரும்பிய நர்மதாவுக்கு , கைகள் துணியால் கட்டப்பட்டு தரையில் அலங்கோலமாக கிடந்த காமாட்சியையும், தன்னை மறந்து பிணம் பல தூங்கி கிடந்த கணேசனையும் பார்த்த பிறகு என்ன நடந்திருக்கு என்பதை யூகிக்க முடிந்தது .கைகள் விடுவிக்கப்பட்ட காமாட்சி ஒரு கோழி குஞ்சினை போல நர்மதாவின் பின்னால் ஒளிந்து கொள்ள எத்தனித்தபோது , நர்மதா உடைந்து அழுதுவிட்டாள்




மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நர்மதாவிற்கு இந்த உலகமே கொடுரமானதாகவும் இறக்கமற்றதாகவும் மனதில் பட்டது. வீட்டை விட்டு வெளியே நடக்க துவங்கிய நர்மதா கால் போன போக்கில் நடந்து போய்க்கொண்டிருந்தாள்.இரவு ஆகியும் நர்மதா வீடு திரும்பாததால் நர்மதாவின் தம்பிகளும் தங்கையும் மிகுந்த கலக்கமுற்றனர். ஆனால் கணேசன் ,சிறிதும் வாய் கூசாமல் நர்மதா வேலை இடத்தில எவனோடோ ஏற்பட்ட காதலால் ஓடி போய் இருப்பாள், என்று இத்துணை அளவு குடும்பத்திற்காக கஷ்டப்பட்ட மகள் மீது மனசாட்சியின்றி பழிசுமத்தினார்.




இரண்டு நாட்கள் கழித்து கிணற்றில் நர்மதா பிணமாக மிதப்பதாக செய்தி பரவியதும் , ஊரார் அனைவரும் அந்த அபலை பெண்ணிற்காக மிகவும் பரிதாபப்பட்டனர். மீன்கள் கடித்து முகம் எல்லாம் சிதைந்து போயிருந்த உடலை உடனடியாக தகனம் செய்ய ஏற்பாடானது. அங்கு நர்மதாவின் தாய் காமாட்சி அழைத்து வரப்பட்டார்.அந்த மனநலம் குன்றிய தாயால் தன்னை ஒரு சேயை போல பாவித்து இத்துணை நாள் சோறூட்டி,காப்பாற்றி ,தன்னுடைய  இயலாமை கண்டு மனம் பொறுக்காமல்,  மனமுடைந்து இறந்து போன மகளின் மரணம் பற்றி உணரவோ அல்லது ,அழுதுகொண்டிருக்கும் தன்னுடைய மற்ற பிள்ளைகளுக்கும் ஆறுதல் தரவோ இயலவில்லை.

 
எப்போதும் போல வெறித்த பார்வையுடன் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தபடி நின்று கொண்டிருந்த காமாட்சிக்கு இனியாவது மனிதத்தன்மையற்ற கணேசனிடமிருந்து விடிவும் ,அந்த குடும்பத்துக்கும் அவரிடமிருந்து பரிவும், பாசமும் கிடைக்கபெறுமா ? 


 நர்மதாவின் ஆத்மா தான் இதற்கு ஆவன செய்ய வேண்டும்.



---சே .தரணிகுமார் .











கணேசன் தரும் சொற்ப வருமானத்தை கொண்டும், வீட்டில் தீப்பெட்டிஒட்டும் வேலையை செய்தும் எப்படியோ  யாரும் பட்டினி இல்லாமல் பார்த்துக்கொள்வது நர்மதாவிற்கு மிகுந்த சிரமமாய் இருந்தது.பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் முடியும் தருவாயில் பூப்பெய்திய நர்மதா அந்த சமயத்தில் தனக்கு வேண்டியவற்றை செய்ய யாருமற்றத்தை நினைத்தும், மகள் பருவம் எய்திய செய்தியை உணரும் திறனற்று எப்போதும் விட்டத்தை பார்த்தபடி அமர்ந்திருக்கும் அம்மாவை நினைத்தும் மிகுந்த வேதனையில் கண்ணீர் விட்டு அழுது விட்டாள்.

Tuesday 6 October 2009

பொய் சத்தியம்


திருவலம்  கிராமம் நகர கலாச்சாரத்தில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு கிராமிய மணம்  சற்றும் மாறாமல் மிக அழகாக இருந்தது .அந்த சிறிய ஊரின் நடுவில்  இருக்கும் அழகிய    மாரியம்மன் கோவில் , அந்த ஊர் மக்களுக்கு காவல் நிலையமாகவும், நீதி மன்றமாகவும், பொழுதுபோக்கு அரங்கமாகவும் , இப்படி சகலமாகவும் இருந்தது. ஊரில் எந்த நிகழ்வு என்றாலும் மக்கள் அந்த மாரியம்மன் கோவில் திடலில் ஒன்று கூடி பஞ்சாயத்தில்  பிரச்சனையை விவாதிப்பது வழக்கம் , கணவன் மனைவி பிரச்சனை முதல் கம்மாய் பிரச்சனை வரை பல  விசயங்களுக்கும்   அங்கு தீர்வு ஏற்பட்டிருக்கிறது. 









அந்த ஊரில் ஒரு வழக்கம் இருந்தது .யாராவது இருவருக்கிடையே பிரச்சனை என்று  பஞ்சாயத்து  வரை  வரும்போது , பஞ்சாயத்தாரால்  முடிவெடுக்க முடியாத தருணங்களில்  சம்மந்தப்பட்ட இருவரையும் கோவிலின் உள்ளே அழைத்து சென்று அம்மன் முன்னிலையில் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்ய சொல்வது வழக்கம்.இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஏற்பட்ட போது எல்லாம் பிரச்சினைக்குரியவர்கள் , இதற்கான ஆயதம் செய்யப்படும் முன்பே பலமுறை தவற்றை ஒப்புக்கொண்டு பின்வாங்கி இருக்கிறார்கள் ,யாருக்கும்  தெய்வத்தின் முன்பு பொய்சத்தியம் செய்ய துணிவு வந்ததில்லை.




 ஒருநாள் மாரியம்மன் கோவில் திடலில் காலையில் பஞ்சாயத்து கூட்டப்பட்டது .அந்த ஊரில் கண்ணியமாக வாழும் சண்முகம் என்பவரது மனைவிக்கும் பக்கத்து வீட்டு கேசவன் என்பவருக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக பஞ்சாயத்து கூட்டப்பட்டிருந்தது .முதல் கட்ட விசாரணையில் , சண்முகத்தின் மனைவி இந்த குற்றச்சாட்டை அடியோடு மறுத்ததோடு , கேசவன்தான் தன்னிடம்  தவறாக நடக்க பலமுறை முயன்றதாகவும் அதற்கு இணங்க மறுத்ததாலேயே இவ்வாறு அவதூறு பரப்பி பஞ்சாயத்து வரை வரவழைத்து தன்னை அவமானப்படுத்துவதாகவும் குற்றஞ் சாட்டினார்







பஞ்சாயத்தார் கேசவனிடம் விசாரித்தபோது, தவறு நடந்தது உண்மை என்றும், குற்றத்தை தான் ஒப்புக்கொள்வதாகவும், இதற்கான தண்டனை எதுவென்றாலும் ஏற்றுக்கொள்ள தயார் என்று கூறியதால் பஞ்சாயத்தார்  என்ன முடிவு எடுப்பது என்று திணறிய போது சட்டென்று ஒரு யோசனை வந்தது, அதன்படி மாரியம்மன் முன்னிலையில் இருவரும் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்து தங்கள் வாக்குமூலத்தை சொல்லும்படி முடிவானது.






இருவரும் அதற்கு ஒப்புக்கொண்டதால் அவர்கள் கோவிலின் உள்ளே அழைத்து செல்லப்பட்டனர்.சண்முகத்தின் மனைவி, முதலில் கற்பூரத்தை அணைத்து, தவறு நடந்ததாக சொல்லப்படுவது முற்றிலும் பொய் என்றும், தவறே நடக்கவில்லை என்றும் கூறி சத்தியம் செய்தார். பின்பு கேசவன் கற்பூரத்தை அணைத்து தவறு நடந்தது உண்மை என்று கூறி சத்தியம் செய்தார் . பின்பு மாரியம்மன் விட்ட வழி என்று அனைவரும் களைந்து சென்று விட்டனர்.




அன்று மாலை கேசவன் தன வீட்டு தோட்டத்தில் உள்ள முருங்கை மரத்தில் ஏறி காய்கள்  பறிக்க எத்தனித்தபோது, கிளை முறிந்து அவர் கிழே கிடந்த உறுதியான கல்லில் மீது விழுந்ததில் அவருக்கு கால் எலும்புகள் மிகவும் சேதாரமாகி போனது. எவ்வளவோ சிகிச்சை அளித்தும் அவருடைய வலது கால் சற்று ஊனமாகி  அவர் காலை  விந்தி விந்தி நடக்கும்படியாக ஆகிவிட்டது.








கோவிலில் சத்தியம் செய்த அன்றே கேசவனுக்கு இவ்வாறாக ஆனதால் ஊரார் கேசவன் பொய் சத்தியம் செய்ததின் விளைவாகவே அவருக்கு இவ்வாறாக ஆனதாக உறுதியாக நம்பினார்கள்.எது எப்படியோ காலை விந்தி விந்தி நடந்து செல்லும் கேசவனை பார்த்தபிறகு அந்த திருவலம் கிராமத்தில் காவல் தெய்வமாக இருக்கும் மாரியம்மன் முன்னால் பொய் சொல்லும் தைரியம் யாருக்கும் வரவில்லை.













- சே . தரணி குமார்

Sunday 4 October 2009

கறுப்பி


அந்த ரயில்வே  காலனியில் வசிப்பவர்களில்  கறுப்பி நாயை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது.அந்த அளவிற்கு கறுப்பி எல்லோருடனும் நன்கு பழகி இருந்தது.சிறு பிராயம் முதலே எல்லோருடனும் இணக்கமாகவும் அன்பாகவும் பழகியதால் கருப்பியை அனைவருக்குமே பிடிக்கும்.  கறுப்பி பகல் நேரங்களில் பெரும்பான்மையாக ரயில்வே நிலையத்திலேயே சுற்றி கொண்டிருக்கும் .மதிய நேரங்களில் ரயில்வே தொழிலாளர்கள் சாப்பிடும் போது கறுப்பிக்கு வயிறு நிறைய சாப்பாடு கிடைத்து விடும் .இரவு சாப்பாடு எங்கள் வீட்டில் சாப்பிடும் .கறுப்பி சாப்பாட்டிற்காக  யார் வீட்டின் முன்பும் நின்றதே இல்லை .கறுப்பி பார்க்க நெகு நெகு வென்று நன்றாக வளர்ந்து இருக்கும் .தூரத்தில் பார்ப்பவர்கள் அதை ஆண் நாய் என்றே ஏமாந்து போவார்கள் .ஆனால்  கறுப்பி யாரையும் வீணாக     பயமுறிதியது   கிடையாது  .மற்றவர்களிடம் பழகுவதை விட என்னிடம் கறுப்பி சற்று அதிக அன்போடு பழகும்.கருப்பியிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் நிற்காமல் செல்லும் ரயில் வரும்போது அந்த ரயிலின் வேகத்திற்கு பிளாட்பாரம் உள்ள நீளம் வரை துரத்தும் .இது எங்களுக்கு எல்லாம் வேடிக்கையாக இருக்கும் .






கறுப்பி முதன் முதலாக சூள் கொண்டு குட்டி ஈனும் காலம் நெருங்கியதும் , அதன் குட்டிகளை எடுத்து வளர்ப்பதற்கு சிறுவர்கள் மத்தியில்  நான் நீ என்று போட்டி ஏற்பட்டது .இறுதியில் யார் வீட்டின் அருகே அது குட்டி ஈனுகிறதோ அவர்கள் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவது என்று முடிவானது. ஒரு மழைக்கால மாலை பொழுதில் கறுப்பி இரண்டு குட்டிகளை எங்கள் வீட்டின் டிசம்பர் பூ செடியின் உள்ள ஈன்றது.  கருப்பியின்  குட்டிகளை யாருக்கு தருவது என்ற முடிவு எடுக்கும் தகுதி பெற்றதால்  மறுநாள் முதல் எங்கள் காலனி பிள்ளைகள் மத்தியில் நான் ஹீரோவாகி போனேன் .குட்டி ஈன்ற  நாய்கள் யார் அதன் அருகில் சென்றாலும் அதன் குட்டிகளை எடுக்க  வருவதாக நினைத்து கடித்து விடும் என்று எல்லோரும் பயமுறுத்தியதால் கறுப்பி இல்லாத சமயங்களிலேயே என்னால் அதன் குட்டிகளை பார்க்க முடிந்தது .




இரண்டு நாள் கழித்து எதேச்சையாக தோட்டத்தின்  உள்ளே  சென்ற  என் அப்பாவை கறுப்பி சட்டென்று கடித்து விட்டது.இந்த நிகழ்வால் யாருக்கும் கருப்பியின் மீது கோபம் வரவில்லை,மாறாக குட்டி ஈன்ற நாய் என்ற பரிவும் , மேலும் கடித்து விடுமே என்ற பயமுமே அதிகம் வந்தது .அன்று மாலை மேகம் கருத்து நன்கு மழை வர ஆயத்தம் ஆனது .சற்று நேரத்தில் எல்லாம் சட சட வென மழையும் கொட்ட ஆரம்பித்தது. வீட்டு வாசலில் உட்கார்திருந்த எங்களுக்கு மழையில் நனையும் குட்டி நாய்களின் ஓலம் மனதிற்கு வேதனை தந்தாலும் அருகே செல்ல பயமாக இருந்தது.திடீரென்று தோட்டத்தை விட்டு வெளியே ஓடி வந்த கறுப்பி என்னிடம் வந்து ஓலம் விட்டு அழுததோடு    என் சட்டையை பிடித்து இழுக்க ஆரம்பித்தது .இந்த நிகழ்வு அங்கு இருந்தவர்களை பயமுறுத்தியதால் அவர்கள் கருப்பியை விரட்ட எத்தனித்த போது  , எனக்கு மட்டும் சட்டென்று கறுப்பி ஏன் என்னை அழைக்கிறது என்பதின் அர்த்தம் விளங்கியது.




நான் எழுந்து தோட்டத்தின் பக்கம் போக ஆரம்பித்ததும் , கறுப்பியும் என் பின்நூடே ஓடி வர ஆரம்பித்தது ,என் பெற்றோர்களின் எதிர்ப்பு குரலையும் மீறி நான் தோட்டத்தின் உள்ளே  சென்று சேற்றில் பரிதவித்த  கருப்பியின் குட்டிகளை அள்ளி எடுத்தபோது கறுப்பி அதை அமோதிப்பது போல வாலை குழைத்து அதன் நன்றியை வெளிப்படுத்தியது . நான் கருப்பியின் குட்டிகளை  துடைத்து வீட்டின் தாழ்வாரத்தின் ஓரம் விட்டதும் , கறுப்பி அதன் குட்டிகளை அரவணைத்து கதகதப்பூட்டி பால் குடுக்க ஆரம்பித்தது . இந்த நிகழ்வு அங்கு இருந்த அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.















மறுநாள் முதல் கருப்பியின் இரண்டு ஆண் வாரிசுகளும் எனக்கு நண்பர்கள் ஆகி போனார்கள் .வெளியில் இருந்து கறுப்பி வந்தாலும் குட்டிகள் என் கையில் இருந்தாலும் கறுப்பி எப்போதும் அதற்க்கு  எதிர்ப்பு காட்டியதே இல்லை .மாறாக வாலை குழைத்து சந்தோஷ பூரிப்பை வெளிப்படுத்தும்.குட்டிகள் சற்று வளர்வதுர்குள்ளாகவே ஒருநாள் வழக்கம் போல அதி வேக ரயிலை துரத்த எத்தனித்த கறுப்பி அந்த ரயிலில் சிக்கி பரிதாபமாக சிதறி போனது .வீட்டில் அதன் குட்டிகளுடன் நான் விளையாடி கொண்டு இருந்தபோது   வெளியில் இருந்து வந்த என் அப்பா கருப்பியின் முடிவை சொன்னதும் துக்கம் தாளாமல் வாய் விட்டு கதறி அழுவிட்டேன் .அன்று காலனி முழுவதுமே சோகத்தில் ஆழ்ந்து கிடந்தது.எல்லோரும் கருப்பியை பற்றி மட்டுமே பேசிக்கொண்டு  இருந்தனர் .மறுநாள் முதல் கருப்பியை மறந்து அவரவர் வேளைகளில் மூழ்கி போன போது  என்னால் மட்டும் கருப்பியை மறக்க இயலவில்லை .






கருப்பியின் சாம்பல் நிற  குட்டிகள்  சற்று வளர்ந்ததும் அவைகளை வளர்க்க எல்லோரும் பிரியபட்டனர் , ஆனால் நான் யாருக்கும் அவைகளை தர மறுத்து நானே வளர்ப்பதாக சொன்ன போது  என் வீட்டில் இதை மறுத்து சொல்ல யாருக்கும் மனம் வரவில்லை.கறுப்பி என்னை நம்பித்தான் அதன் குட்டிகளை விட்டு விட்டு போயிருப்பதாக எப்போதும் எண்ணி கொள்வேன் .கருப்பியின் குட்டிகளை கண்ணுக் கருத்துமாக வளர்த்து வருகிறேன் , எப்போதும்  அவைகளை ரயில் நிலையம் பக்கம் மட்டும் அழைத்து போவதே இல்லை.நான் இல்லாத நேரங்களில் தப்பி தவறி கருப்பியின் குட்டிகளை ரயில் நிலையத்தின் பக்கம் பார்த்தால் தயவு செய்து   அவைகளை என் வீட்டின் அருகே கொண்டு வந்து விட்டு விடுங்கள் .இதை  நீங்கள் கருப்பிக்காக  செய்யும் உபகாரமாக எண்ணி கொள்ளுங்கள் .





- சே .தரணி குமார்

LinkWithin

Related Posts with Thumbnails